திங்கள், 9 மார்ச், 2015

புதிய தலைமுறை--இந்து அமைப்புகள் 
தம்பதியரின் ஊடலும் 
குட்டி முதலாளித்துவத் தவளைக் கூச்சலும்!
-------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------
ஊடுதல் காமத்திற்(கு) இன்பம் அதற்கின்பம் 
கூடி முயங்கப் பெறின்.  
........(குறள்: 1330)..........
ஓரிரு தினங்களுக்கு முன்பு, மார்ச் 8, 2015 அன்று,
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக வாயிலில் 
நின்று கொண்டிருந்த, அந்நிறுவன ஊழியர்கள் சிலர் மீது, 
இந்து அமைப்பினர் சிலர், சற்றே மென்மையானதொரு 
தாக்குதலைத் தொடுத்துள்ளனர்; கடிது ஓச்சி மெல்ல 
எறிந்துள்ளனர். தொடங்கிய வேகத்திலேயே தாக்குதல் 
முடிவுக்கு வந்தும் விட்டது.
------------------------------------------------------------------------------------------
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்  (குறள்: 1302)
என்ற குறளை இந்து அமைப்பினர் அறிந்து இருக்கக் கூடும்.
தருண் விஜய் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கக் கூடும்.
எனவே தாக்குதலை நீள  விடவில்லை அவர்கள். 
------------------------------------------------------------------------------------------------
(மேற்கூறிய  குறளின் பொருள் தெரியாதவர்கள் உடனடியாக 
ஏதேனும் ஒரு உரையைப் படிக்கவும்.கலைஞர் கருத்துரையை
நான் பரிந்துரைக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.காடையர்களே 
திருக்குறளை ரோடு காடெல்லாம் மனப்பாடம் செய்து 
கொண்டு போகும்போது, தமிழன் படிப்பதற்கு என்ன தடை?)
----------------------------------------------------------------------------------------------
புதிய தலைமுறை--இந்து அமைப்புகள் தொடர்பான  இந்த
நிகழ்வு அவர்களுக்கு இடையிலான பூசல் கூட அன்று; வெறும் 
ஊடலே. அவா அவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்!!
இதில் தமிழ்ச் சமூகம் அக்கறை கொள்வதற்கு ஒன்றுமே 
இல்லை.
--------------------------------------------------------------------------------------------------
பாசிச எதிர்ப்புப் போரை தமிழகத்தில் பு.த.வினர் தலைமை 
ஏற்று நடத்துவது போலவும், இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் 
முத்துத் துறைமுகத்தில் ஜப்பானியர்கள் குண்டு போட்டது 
போன்றது என்றும் சித்தரிக்க முயல்வது பேதைமையுள் எல்லாம் 
பேதைமை ஆகும்
-----------------------------------------------------------------------------------------------------
குறைந்தபட்ச ஜனநாயகமோ, ஊடக அறமோ இன்றி, சுத்த 
வணிக நோக்கில் நடத்தப்படும் ஊடகங்களில் ஒன்றுதான் பு.த 
உச்ச நீதிமன்றத்தில் பிணை கிடைக்கப் பெற்று, பெங்களூரு 
பரப்பன அக்கிரகாரச் சிறையில் இருந்து விடுதலையாகி,
ஜெயலலிதா தமிழகம் வந்த நிகழ்வுகளைக் காட்சிப் படுத்திய 
பு.த, ஜெயலலிதாவை ஜோன் ஆப் ஆர்க்காகச்  (Joan of Arc)  
சித்தரிப்பதில் தந்தி டி.வி.யோடு போட்டி போட்டது. இதுதான்  
பு.த.வின் யோக்கியதை.
-------------------------------------------------------------------------------------------------
எத்தியோப்பியாவில் வழுக்கைத் தலையை  மறைக்கும் சவுரி 
முடித் தலைப்பாகையின்  (WIG) விலை உயர்வைக் கண்டித்து 
இங்கிருந்தே அறிக்கை விடும் பாரிவேந்தர், இந்நிகழ்வு 
குறித்து வாய் திறக்காமல் பகவத் கீதை கூறும் 'ஸ்திதப் பிரக்ஞன்' 
ஆகக் காட்சி தருவதன் சூட்சுமம் என்ன? தம் நிறுவனத்தை  
லும்பன்கள் அடித்து நொறுக்கும்போது, அதில் இருந்து
தம் நிறுவனத்தைக் காத்துக் கொள்ளத் தெரியாத முட்டாளா,
பாரிவேந்தர்?  
---------------------------------------------------------------------------------------------------
சரி, பாரிவேந்தர் கிடக்கட்டும், அவருடைய IJK கட்சி,
தங்கள் செயற்குழு, பொதுக்குழு, ஆட்சிமன்றக்குழு  
எல்லாவற்றையும் கூட்டி, இந்து அமைப்புகளைக் கண்டித்து 
ஒரு காகிதத் தீர்மானமாவது போடுமா?
---------------------------------------------------------------------------------------------------
இது புரியாமல் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும்
குட்டி முதலாளித்துவ விடலைகள் துள்ளிக் குதிப்பது ஏன்?
தேநீர்க் கோப்பைக்குள் புயலை  உருவாக்கி மகிழும் இந்தச் 
சிறுபிள்ளைத் தனம் மார்க்சியத்துக்கு ஏற்புடையது அல்ல.
----------------------------------------------------------------------------------------------------
தாக்குதலுக்குப் பதில் எதிர்த்தாக்குதலே. இதைத்தான் மார்க்சியம்
போதிக்கிறது. இந்து முன்னணி அல்லது இந்து மக்கள் கட்சி 
அலுவலகம் முன்பு திரண்டு, எதிர்த் தாக்குதல் கூட வேண்டாம்,
ஒரு போர்க்குணமிக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது தகுந்த 
பதிலடியாக அமையும். இதற்கு குட்டி முதலாளித்துவ 
விடலைகள் தயாரா?
---------------------------------------------------------------------------------------------------------
ஒரு நல்ல முன்னுதாரணத்தைச சொல்லுகிறோம். சில 
ஆண்டுகளுக்கு முன்பு, வேதாந்தி என்ற வடஇந்திய, 
இந்து அமைப்புக் காடையன், கலைஞரின் நாக்கை அறுத்து 
விடுவேன் என்றான். அவ்வளவுதான்! கமலாலயத்தின் மீது
பாறாங்கல்லை வீசித் தாக்கினான் மானமுள்ள திமுக 
தொண்டன். அடுத்த நொடி, கலைஞரின் காலடியைத் 
தஞ்சம் அடைந்த இல கணேசன் வேதாந்தியை விவாகரத்து 
செய்தார். பிரச்சினை மங்களமாக முடிந்தது.
---------------------------------------------------------------------------------------------- 
 வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
**************************************************************             
    
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக