வெள்ளி, 11 நவம்பர், 2016

கொண்டு வா ஜெராக்ஸை என்று கியூவில் நின்ற
அனைவரையும் வெளியேற்றிய ஸ்டேட் வங்கி!
ரூ 1000 நோட்டுகளை மாற்றச் சென்றபோது அராஜகம்!
---------------------------------------------------------------------------------------------------
இன்று காலை (19.11.2016) 10.15 மணிக்கு ஸ்டேட் வங்கி
ராஜாஜி சாலை கிளைக்குச் சென்றேன். நான்கு
நோட்டுகளை (ரூ 1000) மாற்றிட. நான் சென்றபோதே சுமார்
100 பேர் நின்று இருந்தனர். கியூவில் நானும் நின்றேன்.
ஒரு படிவத்தை என்னிடம் அளித்த வங்கி ஊழியர்கள்,
அதை நிரப்புமாறும், பான் கார்டு அல்லது ஆதார் கார்டு
என்று ஏதாவது ஒரு நிரூபண அட்டையின் ஜெராக்ஸ்
பிரதியை இணைக்குமாறு கூறினார்.

என்னிடம் ஜெராக்ஸ் பிரதி இல்லை. நேற்றைய தினம்
எந்த ஊடகமும் ஜெராக்ஸ் கொண்டு செல்லுமாறு
கூறவில்லை; பத்திரிக்கைச் செய்தியும் அப்படி இல்லை.
உண்மையில் அரசு அப்படி அறிவிக்கவே இல்லை.

என்றாலும், ஊழியர்களின் கட்டாயத்தால், கியூவில்
இருந்து விலகி, ஜெராக்ஸ் எடுக்கச் சென்றேன். அருகில்
ஜெராக்ஸ் கடை இல்லை. அடுத்த தெருவில் உள்ள
செகண்ட் லைன் பீச் ரோட்டில் உள்ள
சிவா ஜெராக்ஸுக்குச் சென்று, பான் கார்டை
ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வந்த
போது மணி 10.45. நீண்ட கியூ வரிசையில்  மிகவும்
பின்தங்கி நின்றேன்.

மொத்தக் கூட்டமும் ஜெராக்ஸ் எடுக்க ஓடிக் கொண்டு
இருந்தது. பின்னர் வெகுநேராக் கழித்து, என் முறை வந்து,
உள்ளே சென்று,  ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக்
கொடுத்து, அதற்குரிய நூறு ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தேன்.

இன்று இரவு தொலைக்காட்சி செய்திகளில், ரூ 1000,
ரூ 500  நோட்டுகளை மாற்ற, ஜெராக்ஸ் பிரதி
தேவையில்லை என்று ஸ்டேட் வங்கியின் தலைவர்
அருந்ததி அம்மையார் கூறியுள்ளது டி.வி.யில்
செய்தியாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஜெராக்ஸ் பிரதி தேவை என்று அரசு அறிவிக்கவில்லை.
ஊடகங்களும் சொல்லவில்லை. இன்று காலை
வங்கிக்குச் சென்றபோது, வங்கி ஊழியர்கள்
திடீரென்று ஜெராக்ஸ் பிரதி கேட்டு, மக்களைத்
தொல்லைப் படுத்தியது அயோக்கியத் தனமா
இல்லையா?

ஜெராக்ஸ் பிரதி வேண்டும் என்று கட்டாயப் படுத்திய
கிளை மேலாளரை ஏன் இன்னும் சஸ்பெண்டு
செய்யவில்லை? கிளை மேலாளர்கள் அத்தனை
பேரும் ஜெராக்ஸ் பிரதி கேட்டார்கள் என்றால்,
அவர்களில் சிலரையாவது சஸ்பெண்ட்
செய்தால்தானே அவர்களுக்கு புத்தி வரும்?

இந்தியாவின் நிதித்துறைச்  செயலாளரை விட
அதிகாரம் படைத்தவரா ஒரு கிளை மேலாளர்?
அரசாங்கமே கேட்காத ஜெராக்ஸ் பிரதியை
கட்டாயப் படுத்துவதற்கு ஒரு கிளை மேலாளருக்கு
என்ற உரிமை அல்லது அதிகாரம் இருக்கிறது.

மக்களை மயிருக்குச் சமமாக மதிக்கும் திமிர்த்தனம்
தானே இதற்கு காரணம்? ஜெராக்ஸ் கட்டாயம் என்றால்,
அதை முந்திய நாளிலேயே சொல்ல வேண்டும் அல்லவா?
கியூவில் நிற்பவனை கழுத்தைப் பிடித்துத் தள்ளி,
ஜெராக்ஸ் பிரதி கொண்டு வரச் சொல்லி, கட்டாயப்
படுத்தும் அராஜகம் இந்த ஊழியர்களின் மூளையில்
உறைந்து கிடப்பது எப்படி?   
******************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக