புதன், 13 ஜனவரி, 2016

நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியாது!
கூடங்குளம் அணுக்கழிவால் திமிங்கலங்கள்
கரை ஒதுங்கவில்லை!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
திருச்செந்தூர் கடற்கரை அருகில் செவ்வாய் அன்று (12.01.2015)
நூற்றுக் கணக்கான திமிங்கலங்கள் வழி தவறிக்
கரை ஒதுங்கி உள்ளன. இவற்றில் 45 திமிங்கலங்கள்
இறந்து விட்டன. மீதியைக் கடலுக்குள் அனுப்பும்
முயற்சிகள் நடந்து வருகின்றன.

திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்குவது  காலம்
காலமாக நடைபெற்று வரும் இயற்கை நிகழ்வு. இதில்
மனிதக் காரணிகள் எதுவும் இல்லை.

2015 பிப்ரவரியில் நியூசிலாந்து கடற்கரையில் 198 பைலட்
வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 100 இறந்தன.
நியூசிலாந்து கடற்கரையில் மட்டும் திமிங்கலங்கள்
கரை ஒதுங்கும் நிகழ்வுகள் ஆண்டுக்கு 85 நடக்கின்றன.

2013இல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில்
51 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 22 இறந்தன.

தைவான் கடற்கரை, ஆஸ்திரேலியக் கடற்கரை, கலிபோர்னியக்
கடற்கரை என்று உலகில் எங்கெல்லாம் கடற்கரைகள்
உள்ளனவோ அங்கெல்லாம் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி
இருக்கின்றன. இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது
குறித்த நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. நூற்றுக்
கணக்கான பதிவுகள் உள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கும் மொத்த நிகழ்வுகளில் 60 சதம்
பின்வரும் மூன்று கடற்கரைப் பகுதிகளில் நடக்கின்றன.
1) நியூசிலாந்து கடற்கரை 2) டாஸ்மேனியா கடற்கரை
3) வடகடல் பகுதி.
ஆஸ்திரேலியாவுக்குக் கீழ் டாஸ்மேனியா இருக்கிறது
(இந்தியாவுக்குக் கீழ் இலங்கை இருப்பது போல)
வடகடல் (North Sea) என்பது இங்கிலாந்து-ஸ்காட்லாந்து
ஒருபுறமும், நார்வே-டென்மார்க் மறுபுறமும் சூழ்ந்த
கடல். உண்மையில் இது அட்லாண்டிக் கடலின் ஒரு
பகுதியே.

மேற்கூறிய கடற்கரைகளில்,  பைலட் வகை திமிங்கலங்கள்
மட்டுமின்றி, ஸ்பெர்ம் வகை திமிங்கலங்களும்  கரை
ஒதுங்குகின்றன. ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் ராட்சத
அளவிலானவை. 50 அடி நீளமும் 40 டன் எடையும் உள்ளவை.
பைலட் வகை திமிங்கலங்கள் 20 அடி நீளமும் ஒரு டன்
முதல் 2 டன் வரையிலான எடை உள்ளவை. திருச்செந்தூர்
கடற்கரையில் ஒதுங்கியவை பைலட் வகையைச் சேர்ந்த
சிறிய திமிங்கலங்களே.

கரை ஒதுங்கக் காரணம் என்ன?
---------------------------------------------------
1) கடலடி நீரோட்டங்கள் 2) பசிபிக் பகுதியில் ஏற்படும்
எல்நினோ நிகழ்வு காரணமாக ஏற்படும் நீரோட்டங்களின்
மாற்றம் 3) HAB எனப்படும் (Harmful Algal Bloom) நோய்த்தொற்றை
ஏற்படுத்தும் கிருமிக் கூட்டம் (இது Red Tide, சிவப்பு அலை
என்று அழைக்கப் படும்). இவையும் இவை போன்ற
காரணங்களாலும் திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாகக்
கரை ஒதுங்குகின்றன. இது mass stranding எனப் படுகிறது.

கூடங்குளம் அணுக்கழிவு காரணமா?
--------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலைக் கழிவைக் கடலில் கொட்டுவதால்
திமிங்கலங்கள் இறந்து போயின என்று கூறுவது முற்றிலும்
தவறு. இது குணப்படுத்த முடியாத அறியாமை மட்டுமல்ல
கிரிமினல் தன்மை கொண்ட சமூக விரோத வதந்தியும்
ஆகும். மக்களை அச்சுறுத்தி அவர்களின் வாழ்வைச்
சீரழிக்கும் தன்மை கொண்டது இந்த வதந்தி.

நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியுமா? ஒரு இஸ்திரிப்
பெட்டியில் உள்ள நெருப்புங் கங்குகளை காகிதத்தில்
பொட்டலம் கட்டி எடுத்துச் செல்ல முடியுமா? முடியாது.
அது போலவே அணுக்கழிவுகளை லாரியில் அல்லது
டிரக்கில் லோடு ஏற்றி, கடற்கரையில் லோடு இறக்கி,
கடலில் கரைத்து விட முடியாது.

அணுக்கழிவு என்பது அணுமின் உற்பத்திக்குப் பின்னர்
எரிந்து போன யுரேனியம் தண்டுகள் (spent fuel) உள்ளிட்ட
கடுமையான கதிரியக்கத் தன்மையுள்ள தனிமங்களைக்
கொண்டதாகும். ஒரு ஆலையின் கழிவுகளை, ஒரு
மருத்துவ மனையின் கழிவுகளை, ஒரு காய்கறிச்
சந்தையின் கழிவுகளைக் கையாள்வது போல,
அணுக்கழிவுகளைக் கையாள முடியாது.

அவ்வாறு கூடங்குளம் அருகில் உள்ள கடலில்
அணுக்கழிவுகள் கொட்டப்பட்டு இருக்குமானால்,
திமிங்கலங்கள் மட்டுமல்ல, மனிதர்களும் கூட்டம்
கூட்டமாகச் செத்துப்போய் இருப்பார்கள். வடகிழக்குப்
பருவக்காற்று வீசிய டிசம்பர் மாதத்தில், அணுக்
கழிவுகளால் ஏற்படும் கதிரியக்கம் காற்றில் பரவி,
மொத்தத் தமிழ்நாட்டையுமே பாதித்து இருக்கும்.
பல்லாயிரக் கணக்கில் மக்கள் செத்து மடிந்து
இருப்பார்கள்.

எனவே கூடங்குளம் அணுக்கழிவுகள் கடலில்
கொட்டப் படுவதால் திமிங்கலங்கள் மாண்டு போயின
என்று வதந்தியைப் பரப்புவோர் உண்மை உணர்ந்து
சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: 12.01.2015 செவ்வாய் இரவு 7 முதல் 8 மணி
வரையிலான சத்தியம் சாத்தியமே என்ற சத்யம் டி.வி.
விவாத நிகழ்ச்சியில் நியூட்டன் அறிவியல் மன்றம்
தெரிவித்த கருத்து இது.
************************************************************      





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக