வெள்ளி, 1 ஜனவரி, 2016

வியாபாரத் தந்திரம் சமூகநலத் திட்டம் ஆகாது!
மார்க் ஒரு தேவதூதர் அல்ல!
Free Basic திட்டத்தால் நன்மையை விடத் தீமையே அதிகம்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
சர்வதேச அளவிலான சமூகநலத் திட்டங்களை ஐ.நா
சபையின் உறுப்பு அமைப்புக்களான யுனெஸ்கோ,
யுனிசெஃப் (UNICEF) ஆகியவை மேற்கொள்கின்றன.
ஏனெனில் ஐ.நா என்பது பல நாடுகளின் அரசுகள்
பங்கேற்கும் ஓர் அமைப்பு. அது லாபம் கருதிச் செயல்படும்
ஒரு வணிக நிறுவனம் அல்ல.

கலைஞர் ஆட்சியின்போது, விவசாயிகளுக்கு இலவச
மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ஆகியன
வழங்கப் பட்டன. பள்ளி மாணவர்களுக்கு ஜெயலலிதா
அரசு இலவச லாப்டாப் வழங்கியது. இவையெல்லாம்
மக்கள் நலன் கருதிய சமூகநலத் திட்டங்கள்.
(Social Welfare Schemes). ஏனெனில் தமிழக அரசு என்பது
லாப நோக்கம் கொண்ட ஒரு வணிக நிறுவனம் அல்ல.

முகநூல் அதிபர் மார்க் முன்மொழியும் Free Basics திட்டம்
மேலே கூறியதைப் போன்ற சமூக நலத் திட்டம் அல்ல.
அது வெறும் வியாபாரத் தந்திரம். அதன் மொத்த லாபமும்
மார்க் அவர்களை மட்டுமே சேரும். அவருக்கு லாபம்
என்றால் யாருக்கு நஷ்டம்? பாமர இந்தியனுக்குத்தான்.

இந்தியாவைப் பொறுத்த மட்டில்,இது ஒன்றும்
WIN-WIN Situation அல்ல. முகநூல் நிறுவனத்தைப்
பாதுகாக்கும் திட்டத்தால் நமக்கு என்ன லாபம்?
நாளையே முகநூலை விட மேம்பட்ட வேறு ஒரு
வலைத்தளம் வரலாம். ஏற்கனவே வாட்சப் (Whats App)
பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. இவ்வாறு
போட்டி மிகுந்த சூழலில், தனது நிறுவன நலன்களைப்
பாதுகாக்கும் பொருட்டு மார்க் கொண்டு வந்த திட்டம்தான்
Free Basics. ஆக, மார்க்கை ஒரு தேவதூதராகக் கற்பனை
செய்து கொண்டு, அவருக்கு ரசிகர் மன்றம் அமைக்க
முற்படுவது ஏமாளித்தனமானது.

டைம்ஸ்  ஆஃப் இந்தியா ஏட்டில் நந்தன் நிலக்கேனி
அவர்கள் எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது.
Free Basics திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும்
நிலக்கேனி, அதற்கு ஒரு மாற்றை முன்வைக்கிறார்.
உண்மையிலேயே மார்க் அவர்களுக்கு வள்ளல் தன்மை
இருக்குமேயானால், நிலக்கேனியின் ஆலோசனையை
ஏற்று தமது திட்டத்தை மாற்றி அமைப்பது அல்லது.

ஆங்கில ஏடுகளில் இத்திட்டம் குறித்து ஆதரித்தும்
எதிர்த்தும் (எதிர்ப்பே மிக அதிகம்) நிறையக் கட்டுரைகள்
வந்துள்ளன. இந்து ஏடு Caution on Free Basics என்று
தலையங்கம் எழுதியுள்ளது (01.01.2015). மேலும்
இத்திட்டத்தை எதிர்க்கும் மூன்று ஆழமான
கட்டுரைகளையும் ஆங்கில இந்து ஏடு (30.12.2015)
வெளியிட்டுள்ளது. டைம்ஸ் ஏடும் இவ்வாறு நிறையக்
கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

எனினும், முதிர்ந்த ஆங்கில வாசகர்களும், கணினி மற்றும்
மென்பொருள் துறையில் பணியாற்றுவோரும் மட்டுமே
இக்கட்டுரைகளால் பயன் பெற முடியும். போதிய ஆங்கிலப்
புலமையற்ற சராசரி இணையப் பயனாளிகளால்
இக்கட்டுரைகளைப் புரிந்து கொள்ள இயலாது.

தமிழ் வாசக உலகில், இப்பொருள் குறித்து ஒன்றுமே
எழுதப் படவில்லை என்றே கூறலாம். திரு பத்ரி சேஷாத்ரி
அவர்கள் இத்திட்டத்தை ஓரளவு ஆதரித்து கருத்துத்
தெரிவித்துள்ளார். அவரின் ஆதரவாளர்கள் சிலர் மிகவும்
நுனிப்புல் தன்மையுடன் மார்க்கை ஆதரித்து மேலோட்டமாக
எழுதி உள்ளனர்.

மார்க்கின் வணிகத் தந்திரத்தை அம்பலப் படுத்தியும்
இத்திட்டத்தை எதிர்த்தும் வாசகர்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நோக்கில், நியூட்டன் அறிவியல் மன்றம்
மட்டுமே இப்பொருளில் எழுதியுள்ளது. அவ்வரிசையில்
இது நான்காவது கட்டுரை ஆகும். இக்கட்டுரைகள் யாவும்
தமிழில் உள்ளன என்பது சிறப்பானது. என்றாலும்
தமிழில் எழுதுவதற்குள் தாலி அறுந்து விடுகிறது.

ஆங்கிலத்தில் ஒரு பத்தியில் (para) எழுத முடிகிற
விஷயத்தை, தமிழில் எழுதினால் ஒரு பக்கம் (page)
ஆகி விடுகிறது. தேவையான கலைச் சொற்கள் தமிழில்
இல்லை. இன்னும் உள்ள கஷ்டங்களைச் சொல்வது
இந்தக் கட்டுரையின் மையத்தை விட்டு விலகுவதாகும்.

மேலும் விவரங்கள் வேண்டுவோர் குறிப்பிட்டுள்ள
ஆங்கிலக் கட்டுரைகளைப் படிக்குமாறு வேண்டுகிறோம்.
***********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக