புதன், 20 ஜனவரி, 2016

(1) ஹைதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் தற்கொலை!
நடந்தது என்ன? தீர்வு என்ன?
--------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------------------------------
இந்தியச் சமூகம் ஒரு சாதியச் சமூகம். இந்திய மக்கள் 
சாதியப் பின்னணியிலேயே சிந்தித்துப் பழகியவர்கள்.
இந்தச் சாதியும்கூட நேற்று முளைத்த ஒன்று அல்ல. மாறாக 
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நிலைத்து வருகிற 
ஒன்று. ஒரு சாதியச் சமூகத்தில் நிலவுகிற எந்த ஒரு 
நிறுவனமும்-- அது பல்கலை, நீதிமன்றம், அரசாங்கம்,
காவல்துறை இப்படி எதுவாயினும்-- சாதிய அம்சங்கள்
கொண்டதாகவே இருக்கும்.

தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் எந்த ஒரு பொருளும் ஈரமாக 
இருப்பது போல, சாதியச் சமூகத்தின் எந்த ஒரு நிறுவனமும் 
சாதிய அம்சங்களுடன் கூடியதாகவே இருக்கும். அதாவது 
எந்த ஒரு நிறுவனமும் சாதிக்கு அப்பால் இயங்க முடியாது.
இது இந்தியச் சமூகம் பற்றிய அடிப்படைப் புரிதல்களில் ஒன்று.

அதே நேரத்தில், இந்தியச் சமூகம் பிரதானமாக ஒரு வர்க்கச் 
சமூகமும் ஆகும். வர்க்கத்துடன் சாதியும் பின்னிப் பிணைந்த  
நிலையில்தான்  இந்தியச் சமூகம் இயங்குகிறது. இவற்றில் 
இருந்து  துண்டித்துக் கொண்டு, இந்தியச் சமூகமோ, இதன் 
நிறுவனங்களோ இயங்க முடியாது. அந்தந்தப் பிரச்சினையைப் 
பொறுத்து, சாதிய, வர்க்க அம்சங்கள் கூடுதலாகவோ 
குறைவாகவோ  இருக்கும்.

எனினும், அண்மைப் பத்தாண்டுகளாக, இந்தியச் சமூகத்தில் 
மதம், சாதி, மொழி போன்ற பண்பாட்டு அடையாளங்களை 
முன்னிறுத்தியும் வர்க்கப் பின்னணியை மறைத்தும், 
மிகவும் வீரியமாக அடையாள அரசியல்  மேற்கொள்ளப் 
பட்டு வருகிறது. இந்தியச் சூழலில் அடையாள அரசியல் 
என்பதே பின்நவீனத்துவம் பெற்றெடுத்த குழந்தைதான்.

ஆக, இந்தியச் சமூகத்தின் இயக்கப் போக்கில், அண்மைப் 
பத்தாண்டுகளாக, மக்களை அணிதிரட்டல் என்பது 
பின்நவீனத்துவ அடிப்படையிலேயே நடைபெற்று 
வருகிறது. இதன் மூலம் வர்க்கச் சுரண்டல் பின்னுக்குத் 
தள்ளப் பட்டு, மதம் சாதி மொழி தேசிய இனம் ஆகிய 
இரண்டாம் நிலை (secondary) அம்சங்கள் முக்கியத்துவம் 
பெறுகின்றன. இதனால் மெய்யான விடுதலையை 
நோக்கி மக்கள் இயக்கங்கள் நகர முடியாமல் பின்னுக்குத் 
தள்ளப் படுகின்றன; திசைதிருப்பவும் படுகின்றன.

இதுதான் இந்தியச் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
இந்தப் புரிதலில் இருந்துதான் ஹைதராபாத் பல்கலையின் 
பிஹெச்.டி மாணவன் ரோஹித் வெமுலா சக்கரவர்த்தியின்
தற்கொலையைப் பார்க்க வேண்டும்.

ரோஹித் எந்த சாதி என்பது இங்கு பிரச்சினையே அல்ல.
அவர் தலித் என்றும் பிற்பட்டவர் என்றும் இருவேறு கருத்துகள் 
நிலவுகின்றன. அது குறித்து அக்கறை கொள்ளத் தேவையில்லை.
ஏனெனில் இந்த நிகழ்வில் அவரின் சாதி நிர்ணயகரமான ஒரு  
பாத்திரத்தை ஆற்றவில்லை. இந்தியச் சமூகம் ஒரு சாதியச் 
சமூகம் என்பதால், எல்லா நிகழ்வுகளும் சாதிய நிகழ்வுகளே 
என்ற பண்படாத (raw) புரிதலில் இருந்து முடிவுக்கு வருவது 
தவறு. அவ்வாறு முடிவுக்கு வருவது பின்நவீனத்துவம் 
வெட்டி வைத்த குழியில் வலியப் போய் விழுவதாகும்.

ஆயின், ரோஹித்தின் தற்கொலைக்கு இட்டுச் சென்ற
காரணிகள் எவை? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------------
தொடரும் 
---------------------------------------------------------------------------------------------  
பின்குறிப்பு: மார்க்சியம், பின்நவீனத்துவம் ஆகியவற்றில் 
போதிய பரிச்சயம் உள்ள வாசகர்களை மனதில் கொண்டு 
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
*********************************************************************    
      



        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக