புதன், 29 ஏப்ரல், 2015

(1) மார்க்சியத்தில் சாதியத்துக்குத் தீர்வு உள்ளதா?
-----------------------------------------------------------------------------------------
தொடர் கட்டுரை-1; மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------------
மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். ஐரோப்பாவில்
சாதி கிடையாது. எனவே மார்க்சியம் சாதியைப் பற்றி
அறிந்து இருக்கவில்லை. இது இயல்பானதே. எந்த ஒரு 
தத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் 
முழுவதிலும் உள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார் 
நிலையிலான தீர்வுகளை (READYMADE SOLUTIONS) வழங்கும் 
என்ற எதிர்பார்ப்பே அறிவியலற்றது (UNSCIENTIFIC).  

மார்க்ஸ் தம் கடைசிக் காலத்தில் இந்தியாவைப் பற்றி
அறிந்து கொள்ள விரும்பினார்.அதற்காக சம்ஸ்கிருதம் 
கற்கத் தொடங்கினார். ஏனெனில், இந்திய இலக்கியங்கள் யாவும்
சமஸ்கிருதத்தில்தான் இருந்தன. ஐரோப்பிய நூலகங்களில்,
குறிப்பாக பிரிட்டிஷ் நூலகங்களில் சம்ஸ்கிருத நூல்கள்தான்
இடம் பெற்று இருந்தன.ஆனால் அவற்றைக் கற்பதற்குள்
மார்க்ஸ் காலமாகி விட்டார்.

மார்க்சுக்கு தமிழ் பற்றி எதுவும் தெரியாது.
தமிழ் ஒரு செம்மொழி என்பதோ, திராவிட மொழிகளுக்கு
அதுதான் மூல மொழி என்பதோ, தென்னிந்தியாவைப் பற்றி
அறிந்துகொள்ள தமிழைத்தான் படிக்க வேண்டும் என்பதோ
மார்க்சுக்குத் தெரியாது. கால்டுவெல் வந்து சொன்ன பிறகுதான்
தமிழனுக்கே தமிழின் அருமை தெரிந்தது.

இந்திய வரலாற்றில் பெரும்பகுதி, இந்தியாவுக்கு வந்த 
வெளிநாட்டு யாத்திரிகர்களின் பயணக் குறிப்புகளில் இருந்துதான் பெறப்பட்டது என்பது இங்கு கருதத் தக்கது. கிரேக்க யாத்திரிகர் 
மெகஸ்தனிஸ் ( கி.மு 350-290 காலக்கட்டத்தில்), சீன யாத்திரிகர்கள் 
பாஹியான் (கி.பி 399-413),யுவான் சுவாங் (கி.பி 634-645),
இஸ்லாமிய யாத்திரிகர்கள் அல் பெருனி (கி.பி 973-1048),
இபன் பதுதா (கி.பி 1304-1368) மற்றும் ஐரோப்பிய யாத்திரிகர்கள் 
ஆகியோரின் பயணக் குறிப்புகள் இந்திய வரலாற்றின் பகுதிகள்.

தமது இந்தியப் பயணத்தின்போது, சீன யாத்திரிகர் யுவான் சுவாங் 
வாரணாசி, வைஷாலி, பாடலிபுத்திரம், புத்தகயா , நாலந்தா, 
ஜலந்தர், லும்பினி, வங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்திய 
நகரங்களில் தங்கினார். சம்ஸ்கிருத மொழியில் இருந்த 
அறுநூறுக்கும் மேற்பட்ட புத்த மத நூல்களைச் சேகரித்தார் 
என்பது வரலாறு. ஆக, இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ள 
உதவும் கருவியாக சமஸ்கிருதம் அன்று இருந்தது.
  
மார்க்ஸ் நீண்ட காலம் வாழ்ந்து இருப்பாரே ஆனால்,
சமஸ்கிருதத்தைக் கற்று இந்தியாவைப் பற்றி
அறிந்து இருப்பார். சாதியைப் பற்றியும் தீண்டாமையைப்
பற்றியும் அறிந்திருப்பார்; தீர்வும் சொல்லி இருப்பார்.
 ஆனால் அந்த வாய்ப்பை இயற்கை மார்க்சுக்கும் வழங்க
வில்லை; நமக்கும் வழங்கவில்லை. (தொடரும்) 
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக