சனி, 25 ஏப்ரல், 2015

தமிழுக்குப் புதிய இலக்கணம் சமைப்போம்!
அத்துச் சாரியை வேண்டாம், அதை ஒழிப்போம்!!
--------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------------------
நன்னூல் என்பதுதான் தமிழின் கடைசி இலக்கண நூல்.
இதுதான் இன்றும் பள்ளிகளில் கற்பிக்கப் பட்டு வருகிறது.
பின்பற்றப் பட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம்
நூற்றுக்கு மேற்பட்ட முறை திருத்தப் பட்டுள்ளது. இதுபோல
நன்னூலைத் திருத்தம் செய்தல் கூடாது. உலகம் அதிவேகத்துடன்
விரைந்து ஓடுகிறது. உலகின் இந்த விரைவுக்கு நம் தமிழ்
மொழியும் ஈடு கொடுக்க வேண்டும் அல்லவா! இல்லாவிடில்
காலம் நம்மைப் புவியின் கடையோரம் தள்ளி விடும்.
**
எனவே தமிழுக்குப் புதிய இலக்கணம் இன்று மிகப் பெரிதும் தேவை.
அதைச் சமைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. எனினும்
தனியொரு தமிழரால், அவர் எத்துணை மாண்பு உடையவர்
ஆயினும், இப்பாரிய பணியைச் செய்து முடிக்க இயலாது.
தமிழறிஞர்கள் ஒன்று திரண்டு, காலம் இட்டுள்ள
கட்டளையை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
**
நாம் சமைக்க இருக்கும் புதிய இலக்கணத்தில், எழுத்து, சொல்
அதிகாரங்களில், அத்துச் சாரியை இடம் பெறுதல் கூடாது.
தமிழின் விரைவுக்குத் தடையாக இருக்கும் இந்த அத்துச்
சாரியை நீக்கப் பட வேண்டும்.
**
பகுபத உறுப்பிலக்கணம் பயின்றோர் சாரியை பற்றி அறிந்து
இருப்பர். பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி பற்றி
அறிய விரும்புவோர் கீழ்நிலை வகுப்புகளின் (8,9,10 வகுப்புகள்)
தமிழ் இலக்கணப் புத்தகங்களைப் படித்தல் நலம்.
** 
இதுதான் சாரியை, காணுங்கள்! பின்வரும் சொற்களைக் கருதுக.
1) குடும்பத்துக்கு 2)படத்துக்கு 3)குளத்தங்கரை 4) வைணவத்தின்.
குடும்பம்+அத்து+கு= குடும்பத்துக்கு.
படம்+அத்து+கு = படத்துக்கு.
குளம்+அத்து+அம+கரை = குளத்தங்கரை
வைணவம்+அத்து+இன் = வைணவத்தின்
**
சொற்களைப் பிரித்துக் காட்டிஉள்ளேன். இதில் "அத்து"
என்ற சொல் வருகிறது அல்லவா! இதுதான் அத்துச் சாரியை.
இது தேவையா? (அன்று தேவைப் பட்டது; இன்று தேவையா?)
குடும்பம்+கு = குடும்பங்கு (அல்லது) குடும்பமுக்கு
குளம் +கரை = குளக்கரை (அத்து, அம் இரண்டுமே வேண்டாமே)
வைணவம்+ இன் = வைணவமின்.
இவ்வாறு எழுதினால் என்ன குறை வந்து விடும் தமிழுக்கு?
**
பின்வரும் சொற்களையும் கருதுங்கள்.
1) நவீனத்துவத்துக்கு 2) சூத்திரத்துக்கு 3)இலக்கணத்துக்கு
4) முதலாளியத்துக்கு 5) நவீனத்துவத்துக்கு.
இவற்றை எழுதிப் பாருங்கள். தட்டச்சு செய்து பாருங்கள்.
நேர விரயம் புரியும்.
**
இப்போது சொல்லுங்கள், தமிழர்களே, தமிழறிஞர்களே,
அத்துச் சாரியை தேவையா?
*****************************************************************

   
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக