வெள்ளி, 18 டிசம்பர், 2015

மோதாதே தூளாவாய், தூளாவாய் மோதாதே!
124A சட்டப் பிரிவை உடைத்தெறிந்த தொழிற்சங்கம்!
-----------------------------------------------------------------------------------
 மகஇக  தோழர்கள் மீது இந்திய தண்டனைச்
சட்டம் 124A பிரிவில் வழக்குத் தொடர்ந்து இருப்பது
கடும் கண்டனத்துக்கு உரியது. 124A பிரிவு தேசத்துரோகக்
குற்றத்தைக் குறிக்கும். அதிகபட்சம் ஆயுள் தண்டனை. 

இவ்வாறு அநியாயமாகவும் முறைகேடாகவும் 124A சட்டப்
பிரிவைப் பயன்படுத்துவதில் ஜெயலலிதாவுக்கு முன்னோடி
ராமச்சந்திர மேனன்தான். மேனன் முதல்வராக இருந்த
காலத்தில், 1980களில் நாங்கள், அதாவது தொலைபேசி
ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர்நல ஆணையர்
அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்
எங்களின் NFTE சங்கத்துடன் AITUC மற்றும் AICCTU
சங்கத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேனனின் உத்தரவின் பேரில். நாங்கள் அனைவரும் 124A
பிரிவில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்
அடைக்கப் பட்டோம். இதில் எங்கள் NFTE சங்கத்தினர்
மட்டும் 48 பேர். இதில் ஏழு பெண்களும் அடக்கம். பிற
சங்கத்தினரின் எண்ணிக்கை தற்போது நினைவில்லை.

124A பிரிவில் வழக்கு இருப்பதால், உயர்நீதிமன்றம்
சென்றுதான் ஜாமீன் பெறமுடியும் என்பது அன்று இருந்த
சூழ்நிலை. எனவே நாங்கள்  ஒருமாத   சிறைவாசத்திற்குத்
தயாரானோம். ஆனால், நாலைந்து நாட்களிலேயே 
எங்கள் NFTE சங்கத்தின் வலிமையால், உயர்நீதி மன்றம்
செல்லாமலேயே அனைவருக்கும் பிணை வாங்கினோம்.

எங்களுக்கெல்லாம் ஜாமீன் கொடுப்பதற்காக,
வழக்கறிஞரின் உத்தரவின் பேரில், அரசு ஊழியர்கள்
சுமார் 500 பேர் தங்களின் ID card மற்றும் salary slip உடன்
சைதை நீதிமன்றத்தை முற்றுகையிட்டனர். ஆனால்
நபர் ஜாமீன் கூடத் தேவையில்லாமல் போனது. ஏனெனில்
எங்கள் அனைவரையும் நீதிபதி சொந்த ஜாமீனில்
விடுதலை செய்து விட்டார்.

சொத்து ஜாமீன், ரொக்க ஜாமீன், நபர் ஜாமீன், சொந்த ஜாமீன்
என்று பல்வேறு ஜாமீன் வகைகள் இருப்பதை வாசகர்கள்
அறிந்திருக்கக் கூடும்.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே கொடிய 124A சட்டத்தை
"எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்" பாணியில்
முறித்துப் போட்டது வலிமையையும் போர்க்குணமும்
மிக்க எங்களின் NFTE சங்கம்தான். (NFTE = National Federation of
Telecom Employees). அன்று இச்சங்கத்தில்தான் CPI, CPM
கட்சியினருடன்,  CPI ML கட்சியைச் சேர்ந்த நாங்களும் 
இருந்தோம். (இன்று  ஆளுக்கொரு சங்கம்)
  
ஜனாதிபதியின் தொலைபேசி முதல் சாமானியனின்
தொலைபேசி வரை இந்தியாவில் உள்ள அனைத்துத்
தொலைபேசிகளும் எங்கள் கட்டுப்பாட்டில் மட்டும்
இருந்தன. இன்றுள்ள தனியார்மயம் அன்று இல்லை.

NFTE நினைத்தால் இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்க
முடியும் என்ற நிலை அன்று இருந்ததால், 124A போன்ற
ராமச்சந்திர மேனனின் பாசிசக் கோமாளித் தனத்தை
நாங்கள் சுலபமாக முறியடித்தோம்.

சிறைவாசலில்  ஆயிரம் பேர் திரண்டு, விண்ணதிரும்
முழக்கங்களுடன் விடுதலையான எங்களை
ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

எழுகுது பார் எழுகுது பார்!
அடக்குமுறையின் இடுப்பொடிக்கும்
ஒற்றுமை இங்கே எழுகுது பார்!

மோதாதே தூளாவாய்
தூளாவாய் மோதாதே
என்ற தொழிலாளரின் முழக்கங்கள் சென்னை மத்திய
சிறையின் மதில் சுவர்களை உடைத்துக் கொண்டு
ஒவ்வொரு செல்லிலும் எதிரொலித்தது.

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில், கதாநாயகன்
பாவெல் விலாசவ் தலைமையில் தொழிலாளர்களின்
பிரும்மாண்டமான ஊர்வலம் எழுச்சியுடன் செல்லும்.
பியதோர் மாசின் பாடிக்கொண்டே செல்வான்.
மோதாதே தூளாவாய், தூளாவாய் மோதாதே என்று
முழக்கம் எழுப்பிக் கொண்டு சென்ற எங்களுக்கு 
பியதோர் மாசின் பெரும் ஆதர்சமாக இருந்தான்.

ஆம், எங்கள் முன்னே, செம்பதாகைகள் காற்றில்
அசைந்து கொண்டே சென்றன. ஆம், அது ஒரு
நீண்ட பயணம்! இன்றும் தொடர்கிறது!
********************************************************       
   
 

           

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக