திங்கள், 21 டிசம்பர், 2015

பணியில் இருக்கும் அரசு ஊழியர்
தேர்தலில் நிற்க முடியுமா?
நடத்தை விதிகள் கூறுவது என்ன?
--------------------------------------------------------------
ஓர் அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது (while on service)
தேர்தலில் நிற்க முடியாது.அரசியலில் ஈடுபட முடியாது.
அரசியல் கட்சியில் உறுப்பினராகக்கூட  இருக்க முடியாது.
அவ்வளவு ஏன்? எந்த ஒரு அரசியல் கட்சியின் நடவடிக்கைகளில்
பங்கு பெறவோ, அந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை
வழங்குவதோ கூட தடை செய்யப் பட்ட  ஒன்று. சுருங்கக்
கூறின்,  இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு
அரசியல் உரிமைகள் (politicalrights) கிடையாது.

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்குத் தனித்தனியான
நடத்தை விதிகள்  (conduct rules) இருந்தபோதிலும் அரசியலில்
ஈடுபடுவது என்ற விஷயத்தில் விதிகள் ஒன்றுபோல்
உள்ளன  அரசியல் ஈடுபாட்டை அனுமதிப்பதில்லை.
(The central civil service conduct rules are mutatis mutandis applicable
to the state civil services)

ஓர் அரசு ஊழியர், மத்திய அரசின் காபினெட் செயலாளர்
முதல், தாசில்தார் அலுவலக பியூன் வரை, யாராக
இருந்தாலும் அரசுப் பதவியில் இருந்து விலகினால்
மட்டுமே தேர்தலில் நிற்க முடியும், சுயேச்சையாகவோ
கட்சி சார்பாகவோ.

அரசுப் பதவில் இருந்து விலக, பொதுவாக, இரண்டு வழிகள்
உள்ளன.
1) ராஜினாமா செய்வது 2) விருப்ப ஓய்வு (Voluntary retirement).
20 ஆண்டு சேவை செய்திருந்தால் மட்டுமே ஒருவர்
விருப்ப ஓய்வுக்குத் தகுதி உடையவர் ஆவார்.

ராஜினாமா செய்தாலும் சரி, விருப்ப ஓய்வு கோரினாலும்
சரி, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு
எந்தக் கட்டாயமும் இல்லை. ஏற்றுக் கொள்வதும்
மறுப்பதும் அரசின் முற்றுரிமை ஆகும்.

ஒரு அரசு ஊழியர் ராஜினாமாக் கடிதம் கொடுத்து விட்டு,
மறுநாளே தேர்தலில் நிற்க முடியாது. அவரின் ராஜினாமா
அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் பணியில் இருந்து
விடுவிக்கப் பட்டிருக்க வேண்டும். உயர் பொறுப்பில்
இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்
(relinquish the charges). அதன் பிறகு அவர் விடுவிக்கப்
படுவார் (relieved off)  இவ்வளவு நடைமுறைகளும்
பூர்த்தியான பின்னரே ஒரு அரசு ஊழியர் தேர்தலில்
போட்டியிட முடியும்.

பதவி விலகி இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகே
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்டாயம்
இல்லை.

நான் மத்திய அரசுப் பணியில் இருந்தபோது, தந்தி
ஊழியராக இருந்த கரிகாலன் என்பவர் என்னிடம் வந்தார்.
தான் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 
தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் திமுகவில்
தமக்கு டிக்கட் வழங்கப் பட்டுள்ளதாகவும் கூறி
தமது விருப்ப ஒய்வை விரைந்து பெறுவதற்கு ஆவன
செய்யுமாறும் கோரினார். அதன்பேரில், பதின்மூன்றே
நாட்களில் அவரின் VRக்கு  (VOLUNTARY RETIREMENT)
அனுமதி பெற்றுத் தந்து அவரை அரசுப் பணியில்
இருந்து விடுவிப்பதில் பெரும்பங்கு ஆற்றினேன்.

அவரும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில்
வெற்றியும் பெற்றார். (அவரது  இயற்பெயர் இப்போது
எனக்கு மறந்து விட்டது. ஆயிரம் விளக்கு DTO வில்
T /Man  outdoorஆகப் பணியாற்றினார்.)

இன்றும் கூட, பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில்
பணியாற்றி வரும் ஊழியர்களின் ராஜினாமா மற்றும்
விருப்ப ஓய்வுக் கோரிக்கைகள் நிர்வாகத்தால்
அனுமதி மறுக்கப்பட்டுக் கிடப்பதை நான் அறிவேன்.

எனவே, அரசுப் பணியில் இருக்கும் எவர் ஒருவரையும்
முதல்வர் ஆக்குவேன் என்று கூறிப் பேரணி நடத்துவது
கடைந்தெடுத்த முட்டாள்தனமே.

பின்குறிப்பு: இக்கட்டுரையில் resignation அல்லது VRஐ
ஏற்றுக் கொள்வதற்கு முன்நிபந்தனையாக உள்ள
Vigilance Clearance பற்றிக் குறிப்பிட இடமில்லை.
பின்னர் பார்க்கலாம்.
*******************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக