புதன், 30 டிசம்பர், 2015

நாய்ப் பொறையும் சரவண பவன் சாப்பாடும்!
முகநூல் நிறுவனத்தின் Free Basics திட்டத்தை ஏன்
எதிர்க்க வேண்டும்?
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இணையச் சந்தை உலகின் பல கார்ப்பொரேட்
நிறுவனங்களின் கண்ணைப் பறிக்கிறது. இந்தச் சந்தையை
எப்படியேனும் வசப் படுத்தி விட வேண்டும் என்று உலகின்
முன்னணி கார்ப்பொரேட் நிறுவனங்கள் காய் நகர்த்தி
வருகின்றன.

உலக அளவில் அமெரிக்கா சீனாவை அடுத்து
இணையப் பயன்பாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தில்
உள்ளது. எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும், இந்தியாவின்
இணையக் குடிமக்கள் (netizens), அதாவது இணையத்தைப்
பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடி என்பது அனைவரும்
ஏற்றுக் கொண்ட ஒரு கணக்கு.

மோடி அரசு டிஜிட்டல் இந்தியா என்னும் திட்டத்தைச்
செயல்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. இத்திட்டம்
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, ஐ.மு.கூ-2
ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.
இந்தியாவின் கிராமப் புறங்களுக்கு பிராட்பேண்ட்
விரிவாக்கத்தின் மூலம் இணையதள சேவை வழங்கும்
திட்டம் ஆகும் இது.

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்த பல
கார்ப்பொரேட் கொக்குகள், டிஜிட்டல் இந்தியா என்னும்
உறுமீனைக் கொத்திக் கொண்டு செல்ல முயல்கின்றன.

முகநூல் அதிபர் மார்க் சக்கர்பெர்க் புதுடில்லி வந்து மோடியைச்
சந்தித்தார். தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச்
சந்தித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தமது
நிறுவனத்துக்குப் பங்குண்டு என்ற உறுதியை இந்திய
அரசிடம் இருந்து பெற்றார்.

"இணையதளத் தொடர்பைப் பெறுவது என்பது ஒரு சிலருக்கான
சலுகை அல்ல; மாறாக அது மக்களின் அடிப்படை உரிமை"
(Internet connectivity is not the privilege of a few but a fundamental right)
என்ற விஞ்ஞான சோஷலிசக் கருத்தை மார்க் முன்வைத்தார்.
பேசுவது 'மார்க்'கா அல்லது மார்க்ஸா என்ற ஐயத்தை
எழுப்பினார்.

தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், தமது நிறுவனம்
வழங்கும் Free Basics என்ற திட்டம் மூலமாக இணைந்து கொள்ள
முயற்சி செய்கிறார் மார்க்.

முகநூல் நிறுவனம் அனுமதிக்கும் ஒரு சில இணைய
சேவைகளை, அதாவது மிகவும் அடிப்படையான இணைய
சேவைகளை மக்கள் இலவசமாகப் பெறலாம் என்பதுதான்
Free Basics திட்டமாகும்.

இதன் பொருள், அடிப்படை அல்லாத (non basic) சேவைகளைக்
கட்டணம் செலுத்தித்தான் பெற முடியும் என்பதாகும். இங்கு
"அடிப்படை" என்பதன் மெய்யான பொருள் "குறைந்தபட்சம்"
என்பதுதான். அதாவது குறைந்தபட்சமாக(minimum) ஒரு சில
சேவைகளை வழங்குவதுதான் Free Basics திட்டம்.

இத்திட்டம் ஏற்கனவே கொண்டு வந்த internet.org திட்டத்தின்
புதிய பதிப்புத்தான். internet.org திட்டம் இணைய
நடுநிலையைப் பாதிக்கிறது என்பதால் கடும் எதிர்ப்புக்கு
இலக்கான திட்டம். எனவே எதிர்ப்பைக் குறைக்கும்
பொருட்டு, இலவசம் என்ற போதை ஊட்டப்பட்டு
புத்தம் புதிய திட்டம் போன்ற தோற்றத்துடன், முகநூல்
நிறுவனம் Free Basics திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

Free Basics வழியாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நுழையும்
முகநூல் நிறுவனம், இந்தியத் தொலைதொடர்பு
நிறுவனங்களைத் தன் கூட்டாளியாகச் சேர்த்துக்
கொள்ளும். இந்தியத் தொலைதொடர்பு மாபியா
நிறுவனமான ஏர்டெல் இதில் பிரதான பங்கு வகிக்கும்.
இது சோற்று மூட்டைக்குள் பெருச்சாளியை வைத்துக்
கட்டிய கதையாகும்.

இணையமும் முகநூலும் Free Basics திட்டமும்
உலகம் தழுவியவை. Free Basics திட்டத்திற்கான எதிர்ப்பும்
உலகளாவியது. எனினும் இக்கட்டுரை இந்தியச் சூழலை
மையப்படுத்தி எழுதப் படுகிறது.

இலவசம் என்ற அடைமொழியைக் கொண்டுள்ள முகநூலின்
இத்திட்டம் ஒரு சமூகநலத் திட்டம் அல்ல.
( Not a social welfare measure). மாறாக, ஒரு வணிகத் தந்திரம் ஆகும். எலிப்பொறியில் மசால் வடையை  வைப்பது போன்ற தந்திரம்.

இத்திட்டம் இணைய நடுநிலையைப் பாதிக்கிறது. ஒரு சில
லாபம் கருதும் நிறுவனங்கள் இணையத்தை ஆக்கிரமிக்க
வழி வகுக்கிறது. எனவே இத்திட்டம் முறியடிக்கப்
படுவதன் மூலமே இணைய நடுநிலையைப் பாதுகாக்க
இயலும்.

இணையம் என்பது ஆகாயம் போன்றது. தெருவுக்கு வந்து
ஒரு குன்றின் மேலேறி அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை நம்மால் ஆகாயத்தைப் பார்க்க முடியும்.
இதுபோன்ற நிலையைத் தான் இணைய நடுநிலை என்கிறோம்.
"வாருங்கள், நாங்கள் அமைத்திருக்கும் உயரத்தின் மீதேறி,
ஆகாயத்தைப் பாருங்கள்; ஆனால் தென்மேற்குத் திசையை
மட்டும்தான் நாங்கள் காட்டுவோம்" என்று நிபந்தனை
விதித்தால் அது எப்படி இருக்குமோ, அதைப் போன்றதுதான்
முகநூலின் Free Basics திட்டம்.

முகநூல் அதிபர் மார்க் அன்னதானம் செய்வதாக அறிவிக்கிறார்
என்றால், சரவண  பவன் தரத்தில் இல்லாவிடினும்,
முழுச் சாப்பாடு கிடைக்கும் என்று நம்பித்தான் மக்கள்
அன்னதானத்திற்குச் செல்வார்கள். ஆனால், அன்னதானப்
பிரபுவான மார்க் அவர்களோ, "முழுச் சாப்பாட்டுக்குக்
கட்டணம் உண்டு. ஆனால், ஏழைகளின் பசிபோக்கும்
தொண்டாக, நாங்கள் அடிப்படை உணவான
நாய்ப்பொறையை இலவசமாகத் தருகிறோம்" என்று
கூறினால் அதை ஏற்க முடியுமா? அதைப் போன்றதுதான்
Free Basic திட்டமும். (நாய்ப்பொறை = உலர்ந்த ரொட்டி)

இணைய நடுநிலையைப் பாதுகாப்பது என்பது ஒரு
கன்னிப் பெண் தன கற்பைப் பாதுகாத்துக் கொள்வது போன்றது.
தொடர்ந்து தாக்குதல்கள் வந்துகொண்டே இருக்கும்.
தொடர்ந்து போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் Free Basics திட்டத்திற்கும்
வேறுபாடு தெரியாமலும், அறிவியல்-தொழில்நுட்பம்
பற்றிய பரிச்சயம் இல்லாமலும் உள்ள  சிலர் Free Basics
திட்டத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் சேர்த்து
எதிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறு. குழந்தையைக்
குளிப்பாட்டிய பின், வாளித் தண்ணீரோடு சேர்த்து
குழந்தையையும் வீசி எறிவது போன்றது இது. டிஜிட்டல்
இந்தியா திட்டம் இந்திய நாட்டின் திட்டம். இது இந்திய
மக்களுக்கான திட்டம். இத்திட்டம் மக்களுக்குப் பயனுள்ளதாக
அமைந்திட ஒரு நெடிய போராட்டம் தேவைப் படுகிறது.
அது பற்றி வேறு இடத்தில் காணலாம்.

Free Basics திட்டத்தை எதிர்ப்பவர்கள்  டிசம்பர் 30, 2015
தேதிக்குள் தொலைதொடர்பு ஒழுங்குமுறை
ஆணையத்திடம் (TRAI) தங்கள் கருத்தைத் தெரிவித்து
இருக்க வேண்டும்.
***********************************************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக