திங்கள், 14 டிசம்பர், 2015

ஊதுபத்தி புகைகிறது; வாசனையாக இருக்கிறது என்கிறார்கள்
அதை முகர்ந்தவர்கள். இங்கு வாசனை என்ற சொல் நறுமணத்தைக்
குறிக்கிறது. ஈண்டு எவ்வித அடைமொழியும் இன்றியே வாசனை
என்பது நறுமணம் என்ற பொருளைத் தருகிறது.
**
1) கெட்ட நாத்தம் நாறுது 2) துர்நாற்றம் வீசுது 3) பொண நாத்தம் நாறுது
ஆகிய தொடர்களில் நாற்றம் என்ற சொல்லே தீநாற்றம் என்ற
பொருளைத் தந்த போதிலும் மேலும் விளக்கமாகச் சொல்லும்
பொருட்டு adjectives பெய்யப் படுகின்றன. ஆனால், வாசனை என்ற
சொல்லுடன் எதிர்மறைப் பொருளால் அமைந்த எந்த
அடைமொழியும் பொதுவாகச் சேர்க்கப் படுவதில்லை. சான்றாக,
கெட்ட வாசனை என்ற தொடர் வழக்கில் இல்லை. இதுவே
பெருவழக்காக  உள்ளது. எனினும் இதற்குப் புறனடையும்
இருக்கக் கூடும்.
**
வாசனை என்பது மனம் சார்ந்தது அன்று. (அன்று எனில் இல்லை
என்று பொருள்படும். "அல்ல" என்ற சொல் பன்மை எழுவாய்க்கு உடையதாகும்). வாசனை என்பது ஒரு புறநிலை மெய்மை.
(OBJECTIVE REALITY). பொருளில் இருந்து கிளைப்பது
வாசனை ஆகும். அஃது ஒரு பொருளின் பண்பும் ஆகும்.
எனினும் எவரேனும் ஒருவர், சிறந்தவாசனையை,
தீயதாகக் கற்பிதம் செய்து கொள்வார் எனில், அத்தகைய
கற்பிதம் மொழியைக் கட்டுப் படுத்தாது.
**
சுருங்கக் கூறின், நாற்றம் என்பது தற்காலத்தில்
தீயநாற்றத்தைக் குறிக்கும் சொல்லாகவும், வாசனை என்பது
நறுமணத்தைக் குறிக்கும் சொல்லாகவும்  வழங்கி
வருகின்றன. இதுவே பெருவழக்கு. எனினும், மொழி என்பது
பெருவழக்கிற்குள் மட்டும் அடைந்து விடுவதன்று. அதற்குப்
புறனடையும் உண்டு.  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக