வியாழன், 5 ஜூலை, 2018

(12) ஞானியின் கருத்துமுதல்வாதம்
கடவுள், மதம் ஆகியவற்றுக்கு மறுப்பு!
ஞானிக்கு மறுப்பு கட்டுரைத் தொடர்! எண்: 12
மார்க்சியத்தின் அனைத்து அடித்தளங்களையும்
அசைக்கும் ஞானியின் கருத்துக்கள்!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
கடவுளின் தேவை, மதத்தின் தேவை, சோதிடத்தை
மூடநம்பிக்கை என்று புறக்கணிக்காமல் ஆராய்வது
ஆகிய கருத்துக்களை ஞானி வெளிப்படுத்தி உள்ளார்.
இதை ஏற்கனவே பார்த்தோம். எஸ் என் நாகராஜனும்
கடவுளின் தேவை பற்றியும் மதத்தின் தேவை
பற்றியும் வாதிட்டுள்ளார்.

ஞானியின் கருத்துக்களின் தோற்றுவாய்:
------------------------------------------------------------------------  
1. இம்மானுவேல் கான்ட் (1724-1804): ஜெர்மனியின்
தத்துவஞானியான இவர் தோன்றிய நாள் முதல்
இன்று வரை கருத்துமுதல்வாதத்தின் தலைசிறந்த
தத்துவஞானி ஆவார். ஹெகல் (Hegel 1770-1831)
இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்.
குறிப்பாக ஹெகல் உருவாக்கிய முரண்தர்க்கவியல்
(dialectics) (அதாவது இயங்கியல்) கான்ட்டின் தத்துவத்தில்
இருந்து கொடையாகப்  பெற்று செழுமைப்
படுத்தப் பட்டதாகும். ஹெகல் தமது
முரண்தர்க்கவியலுக்கு (dialectics)  கான்ட்டுக்கு
பெரிதும் கடன் பட்டுள்ளார். ஆக கான்ட் அவ்வளவு
எளிதில் புறக்கணிக்க முடியாதவர்.

கான்ட்டின் தத்துவத்தின் அடிநாதமாக விளங்கும்
அ) சுதந்திர சிந்தனையை அங்கீகரிப்பது
(recognition of freedom, ie freedom of consciousness)
ஆ) அறிவின் புலங்கள் அனைத்தையும்
விமர்சிப்பது (criticism of all the faculties of knowledge)
என்னும் இரு கோட்பாடுகளையும் ஞானி
தமது உயிரான கோட்பாடுகளாகப் பின்பற்றி
வருகிறார்.

2.லுத்விக் பாயர்பாக்: கடவுள் இல்லை என்று இவர்
நிரூபித்த போதிலும், நற்பண்புகளைக் கொண்ட
ஒரு புதிய மதத்தை உருவாக்கலாம் என்ற
கருத்தைக் கொண்டிருந்தார். இக்கருத்தும்
ஞானி, நாகராஜன் ஆகியோரை வசீகரித்தது.

3.எங்கல்ஸ்: கிறித்துவ மதம் அதிகாரத்தை எதிர்த்த
அடித்தட்டு மக்களால் உருவாக்கப் பட்டது, அது
மாபெரும் புரட்சிகர இயக்கம், அது ரோமானியப்
பேரரசை மண்டியிட வைத்தது போன்ற எங்கல்சின்
கருத்துக்கள் ஞாநியைக் கவர்ந்தன.

4. காரல் காவுத்ஸ்கி: எங்கல்சைத் தொடர்ந்தும்
அவரை வழிமொழிந்தும் காவுத்ஸ்கி எழுதிய
நூல்களில் சோசலிசத்தின் முன்னோடியாக
கிறித்துவம் விளங்கியது என்ற கருத்தும்
ஞானியின் மீது செல்வாக்குச் செலுத்தியது.

5.மாக்சிம் கார்க்கி: புதிய கடவுளையும் புதிய
மதத்தையும் உருவாக்க வேண்டும் என்ற மாக்சிம்
கார்க்கியின் கருத்துக்களும், போல்ஷ்விக்
தத்துவஞானி அலெக்சாண்டர் போக்தனோவ்
(Alexander Bogdanov) கூறிய புதிய மதத்தின் உருவாக்கம்
புதிய கடவுளின் வருகை பற்றிய கருத்துக்களும்,
டால்ஸ்டாயின் கருத்துக்களும் ஞானி மீது
செல்வாக்குச் செலுத்தின.

ஞானிக்கு எமது மறுப்பு!
-------------------------------------------
ஞானியை மறுப்பது என்பது மேற்கூறிய ஐந்து
பேரின் (கான்ட், பாயர்பாக், எங்கல்ஸ், காவுத்ஸ்கி,
கார்க்கி)  மதம் பற்றிய கருத்துக்களை மறுப்பது
என்று பொருள்படும். இந்த ஐந்து பேரையும்
மறுக்காமல் ஞானியைத் தொடக் கூட முடியாது.

அரசியல் மற்றும் பொருளாதாரத் தளத்தில்
மறுக்கப்பட வேண்டிய ஞானியின் கருத்துக்கள்:
-----------------------------------------------------------------------------------
1.1848ல் மார்க்சும் எங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட்
அறிக்கை இன்றைய காலத்திற்குப் பொருந்தாது
என்கிறார் ஞானி. எப்படி எப்படி மாற்ற வேண்டும்
என்றும் ஆலோசனை கூறியுள்ளார் ஞானி.

2. சோவியத் ஒன்றியத்தில் லெனினும் ஸ்டாலினும்
கட்டியது சோஷலிசமா என்று கேள்வி எழுப்பும்
ஞானி மையப்படுத்தப்பட்ட பெருந்தொழிலும்
(centralised heavy industries)  சோஷலிசமும் ஒத்துப்
போகாது என்கிறார்.

3.விதிவிலக்கில்லாமல் எல்லாக் கம்யூனிஸ்ட்
கட்சிகளின் ஸ்தாபன அமைப்பு இறுகிக்
கெட்டிப்பட்டதாக இருப்பதாகவும் இதனால்
மார்க்சியத்தை ஏற்கும் திரளான மக்களை
கட்சி தனக்குள் ஈர்த்துக் கொள்ள இயலாமல்
இருப்பதாகவும் ஞானி கூறுகிறார். அதாவது
கம்யூனிஸ்ட் கட்சிகளின் லெனினிய பாணி
கட்சி கட்டும் முறையைக் கேள்விக்கு
உள்ளாக்குகிறார்.

4. சுருங்கக் கூறின்,
(அ) உற்பத்திச் சக்திகளின் தங்குதடையற்ற
வளர்ச்சியே சோசலிசம் என்ற மார்க்சியக்
கருத்தை ஏற்காமல், சோஷலிசத்துக்குப்
புதிய வரையறையை முன்மொழிகிறார்.
(ஆ) கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலைத்திட்டத்தில்
(party programme) மாற்றத்தைக் கோருகிறார்.
(இ) லெனினியக் கட்சி கட்டும் முறைக்குப்
பதிலாக, ஜனநாயக அடிப்படையில் கட்சி
கட்டப்பட வேண்டும் என்கிறார்.

இவை மார்க்சியத்தின் அடித்தளத்தையே
அசைக்கும் கருத்துக்களாகும்.

இக்கட்டுரைத் தொடரில் கூறப்படும்
கருத்துக்கள் ஞானியிடம் சேர்ப்பிக்கப்
பட்டுள்ளன. அவற்றுக்கு அவர் பதிலளிக்க
உள்ளதாக தோழர் இரா மருதுபாண்டியன்
தெரிவித்து உள்ளார். தோழர் மருதுபாண்டியன்
அவர்களுக்கு நன்றி.

இக்கட்டுரைத் தொடரின் அடுத்த கட்டுரை
பின்னர் வெளியாகும். அதில் ஞானிக்கான
மறுப்பு இடம் பெறும்.
********************************************************
தொடரும்
--------------------------------------------------------------------
       



     
       


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக