வெள்ளி, 20 ஜூலை, 2018

பேய்க்கரும்பு இனித்தபோது ஞானம் பெற்ற
பட்டினத்தார் போல, ஞானம் பெற்ற யெச்சூரி!
விண்ணுலகில் இருந்து வாழ்த்தும்
அந்தோனியா கிராம்சியும் கான்ட்டும்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஏகாதிபத்தியத்தின்
முழு ஆதரவுடன் பண்பாட்டுத் துறையில்
கிறித்துவ மதத்தின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.
கிறித்துவத்தை எதிர்கொள்ள அன்றைக்கு
நடப்பில் இருந்த இந்து மதம் பயன்படவில்லை.

எனவே விவேகானந்தர் ஆதிசங்கரரின்
அத்வைதத்தைக் கையில் எடுத்தார். இதன்
மூலம் தத்துவ அரங்கில் அத்வைதம் ஒரு
செகண்ட் ரவுண்ட் வந்தது. 11,12ஆம்
நூற்றாண்டுகளில் விஷிஷ்டாத்வைதம்,
துவைதம் ஆகியவற்றின் தாக்குதலால்
நிலைகுலைந்த அத்வைதம்  முதுமக்கள்
தாழியில் போய் படுத்துக் கொண்டது. அந்தத்
தாழியில் இருந்து அத்வைதத்தை மீட்டெடுத்த
விவேகானந்தர் தம் காலத்தில் தம் தேவைக்காக
அதைப் பயன்படுத்தினார்.தேவை முடிந்ததும்
மீண்டும் அருங்காட்சியகம் சென்றது அத்வைதம்.

இந்திய மார்க்சிய அரங்கில் பண்பாட்டுத் துறையில்
கவனம் செலுத்தும் கணிசமான மார்க்சிய
சக்திகளுக்கு தற்போது ஒரு கருத்துமுதல்வாதம்
தேவைப் படுகிறது. ஆயினும் அவர்கள் யாரும்
நூறு சதம் தூய்மையான  கருத்துமுதல்வாதமான
அத்வைதத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை.
அத்வைதம் அவர்களின் தேவையை
நிறைவேற்றும் ஆற்றலின்றி இருக்கிறது.
அத்வைதம் கவைக்கு உதவாத தத்துவம்.

எனவே கருத்துமுதல்வாதத்தின் தேவையை
உணர்ந்த மேற்கூறிய மார்க்சிய சக்திகள் பலரும்,
இமானுவேல் கான்ட்டின் கருத்துமுதல்வாதத்தைக்
கையில் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஞானி, எஸ் என் நாகராஜன், மாவோயிசப் பாடகர்
கத்தார், சீதாராம் யெச்சூரி இன்ன பிறர்
எல்லோருக்கும் இமானுவேல் கான்ட்தான்
பயன்படுகிறாரே அன்றி, ஆதிசங்கரரால்
கால் காசுக்குப் பயனில்லை.

இதிலும் எஸ் என் நாகராஜனோ இன்னும்
ஒரு படி மேலே சென்று ஆதிசங்கரரை
ஈவிரக்கமற்ற கருணையற்று வறண்ட
கொடிய பாதகர் என்றே வர்ணிக்கிறார். அவர்
ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதத்தின்
உயர்ந்த அம்சங்களை சுவீகரித்துக்
கொள்கிறார்.கான்ட்டின் தத்துவமும் அவருக்கு
ஏற்புடையதாகவும் பயன்படுவதாகவும் உள்ளது.

21ஆம் நூற்றாண்டின் வரலாறு அத்வைதத்தை
மீண்டும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டது.
மக்களைத் திரட்டவும் அணிசேர்க்கவும் எள்ளளவும்
பயன்படாத தத்துவமான அத்வைதத்தை
எவரும் சீந்தவில்லை.

அசலூர்ச் சந்தையில் போய் மாடு பிடித்து
வருபவனைப் போல, ஐரோப்பியச் சந்தையில்
போய் இமானுவேல் கான்ட்டைப் பிடித்துக்
கொண்டு வந்திருக்கிறார்களே தவிர,
உள்ளூரின் வத்துப்பால் மாடான
அத்வைதத்தை, இனிமேல் சினை பிடிக்காது
என்றாகி விட்ட அத்வைதத்தை சீந்த
நாதியில்லை. மலையாளத்துக்கு அடிமாடாகப்
போவதைத் தவிர்த்து அத்வைதத்துக்கு வேறு
வழியில்லை.

பொருள்முதல்வாதம் மட்டும் பத்தாது; கொஞ்சம்
கருத்துமுதல்வாதமும் இருந்தால்தான் கட்சி
நடத்த முடியும்; மக்களைத் திரட்ட முடியும் என்று
கொள்கை முடிவு எடுத்த மார்க்சியக் கட்சிகள்,
அமைப்புகள், கோட்பாட்டாளர்கள் ஆகிய
அனைவருக்கும் ஆபத் பாந்தவனாகவும்
அனாத ரட்சகனாகவும் இருப்பவர் இமானுவேல்
கான்ட்டே. ஆதிசங்கரரோ இந்த மண்ணில்
பிறந்திருந்தும் இந்த மண்ணுக்குப் பயன்படும்
தத்துவத்தைப் படைக்க இயலாமல் போனவர்.
இந்த முடிவில்தான் மேற்கூறிய மார்க்சியர்கள்
அனைவரும் உள்ளனர். ஆதிசங்கரர் ஒரு
வீணாப் போனவர் என்ற பார்வையே
எல்லோரிடமும் காணப் படுகிறது.

பெர்க்லி பாதிரியார் என்பவர் ஐரோப்பாவின்
ஆதிசங்கரர்.அவரை ஒரேயடியில் வீழ்த்தி
விட்டார் இமானுவேல் கான்ட். இன்று திவசம்
கொண்டாடுகிற நாளன்னிக்கு மட்டுமே
பெர்க்லி பாதிரியார் நினைவுகூரப் படுகிறார்.

ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும்
இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வரலாற்றின்
குப்பைத் தொட்டியில் வீசி எறியப் பட்டவர்கள்.
சரித்திரத்தின் தாழ்வாரங்களில் சருகுகளாக
உலர்ந்து போனவர்கள்.

சீதாராம் யெச்சூரி, கத்தார், எஸ் என் நாகராஜன்,
ஞானி இன்ன பிறருக்கு, அவர்களின் தேவைக்கு
அத்வைதம் பயன்படுகிறதா? இல்லையே!
கொஞ்சம்  கருத்துமுதல்வாதம் வேண்டும் என்று
இவர்கள் எல்லோரும் அலைந்தபோது,
ஆதிசங்கரர் அவர்களுக்குத் துளியாவது
பயன்பட்டாரா?

"ஒவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே"
என்று  ஓளவையார் சபித்ததற்கு இணங்க
எட்டி பழுத்தது போலத்தானே ஆகிவிட்டார்
ஆதிசங்கரர். 


கிராம்சியின் அறைகூவல்!
------------------------------------------------
"உங்கள் பண்பாட்டின் வேர்களைக்
கண்டடையுங்கள்; அதிலிருந்து கிளம்பட்டும்
உங்களின் மார்க்சியம்" என்று உலக
மார்க்சியர்கள் அனைவருக்கும் அறைகூவல்
விடுத்தார் அந்தோனியோ கிராம்சி. இவர்
இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்.
முசோலியின் சிறையில் வதைபட்டு உயிர்
துறந்தார். இவரின் சிறைக்குறிப்புகள் ஒரு
முக்கியமான மார்க்சிய ஆவணம் ஆகும்.

கிராம்சியின் அறைகூவலை ஏற்று, சீதாராம்
யெச்சூரி, கத்தார், எஸ் என் நாகராஜன், ஞானி
இன்ன பிறர் இந்தியப் பண்பாட்டின் வேர்களைக்
கண்டடைந்தனர்.அவர்களுக்குக் கிட்டிய
தரிசனப்படி, மக்களின் வாழ்க்கையில் மதத்தின்
பங்கை நிராகரிக்க இயலாது என்ற முடிவுக்கு
வந்தனர். கிருஷ்ண ஜெயந்தியும்
துர்கா பூஜையும் இந்தியப் பண்பாட்டின்
பெருமிதத்துக்கு உரிய வேர்கள் என்ற ஞானம்
யெச்சூரி வகையறாக்களுக்கு ஏற்பட்டது.

எனவே மார்க்சும் லெனினும் தூக்கி எறியச்
சொன்ன கருத்துமுதல்வாதத்தின் மீது
அவர்களுக்கு வெறுப்பு எதுவும் .ஏற்படவில்லை.
மாறாக, கருத்துமுதல்வாதத்திற்கும் இந்தியாவில்
பயன்பாடு உண்டு; அதையும் புரட்சிக்கு(!!)
பயன்படுத்த முடியும் என்று அவர்கள்
தெளிந்தனர்.

ஆக பேய்க்கரும்பு இனித்தபோது பட்டினத்தாருக்கு
ஞானம் வந்தது போல யெச்சூரி வகையறாக்களுக்கு
கருத்துமுதல்வாதம் இனிக்கத் தொடங்கிய போது
மார்க்சிய ஞானமும் கைகூடியது.

பேய்க்கரும்பைச் சுவைத்த யெச்சூரி வகையறாக்கள்
கூட அத்வைதத்தைத் தொடவில்லை என்னும்போது
அத்வைதம் எப்பேர்ப்பட்ட நஞ்சு என்று
எல்லோருக்கும் புரிந்து விடுகிறது.

இமானுவேல் கான்ட்தான் உலகிலேயே மிகக்
கொடிய மனிதர் என்று சொன்ன அயன் ராண்டுக்கு
ஆதிசங்கரரைத் தெரியாது. தெரிந்திருந்தால்
உலகிலேயே மிகக் கொடிய மனிதர்
ஆதிசங்கரர்தான் என்று சொல்லி இருப்பார்.
********************************************************  
              
        



 
  

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக