வெள்ளி, 20 ஜூலை, 2018

புரட்சியும்,
புரட்சியாளர்களும்.புதிய பாதையும் செங்கோ பதிவு.
-----------------------------------------------------------------------------------
"மார்க்சியத்தை மலையளவு
பேசுவோர், நடைமுறையில் நமது
மக்களுக்கு எந்த அளவு
புரட்சியின் மீது நம்பிக்கையை
உண்டாக்கி உள்ளனர் என்பதும்,
ஏன் அவ்வாறு அவர்கள் செய்ய
இயலவில்லை என்பதும் எனது
முக்கியமான கேள்விகள் ஆகும்! '' என்று.
இது மிக முக்கியமான கேள்வி. இன்று புரட்சிபற்றி உண்மையிலேயே சிந்திக்கும் செயல்படும் மார்க்சீயர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் இவ்விசயத்தில் சிறந்த புரிதல் இல்லை. குறிப்பாக இக்கேள்வியை எழுப்பியுள்ள தோழர். காலன்துரை அவர்களுக்கும் கூட இல்லை என்பதே எனது புரிதல்.
இதுபற்றி பெரும்பாலோர் ஆராய்வதற்கே முன்வராமல், லெனின் மாவோ கோசிமின், பிடல் காஸ்ட்ரோ காலத்தைய சமூக நிலமைகளே இன்றும் நிலவுகிறது என்று நம்பிக்கொண்டு செயல்படுகிறார்கள். அதனால் அவர்களது அறிவு திறமை உழைப்பு தியாகம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வீணாகி வருகிறது என்பது வருத்தத்திற்குரியது.
இவ்விசயம் பற்றி தோழர். Ilan Marxist அவர்கள் ஒரு கமன்ட்டில் கூறிய கருத்து அனைவரும் கவனிக்க வேண்டியது, ஆராய்ந்து ஆழமாக புரிய வேண்டியது. இதனை புரிந்துக் கொள்ளாமல் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுவது புரட்சியையோ அல்லது விரைவான மாற்றத்தையோ மேலும் பின்னுக்கு தள்ளுவது.
தோழர். இலான் மார்க்சிஸ்ட் கூறிய தோழர் லெனினின் கருத்துக்கள் தான் கீழ்க்கண்டவை. இதிலிலுள்ள வார்த்தைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அர்த்தங்களில் வேறுபாடு இல்லை.*
"லெனின் சொல்வார் மக்கள்
எப்போது தங்களால் இனி
வாழ முடியாது என நினைக்கிறார்களோ!
அப்போது மக்களின் கோப
கிளர்ச்சி இந்த அரசின் அதிகார வர்க்கத்திற்கு
எதிராக வெடிக்கும், அந்த
கோப, ஆவேச கிளர்ச்சியை
எந்த கொம்பனாலும், எந்த
அதிகார பலத்தை கொண்டும்
அடக்கிட விட முடியாது!!
என்பார், அது நடக்கும்
நடந்தே தீரும்!!''
பெரும்பான்மை மக்கள் இனி தங்களால் வாழ முடியாது என்று நினைக்கும், நம்பும் நிலை இன்று உள்ளதா?. இந்த நிலை இல்லாமல் இருக்கும் போது இன்றைய மார்க்சீயர்கள் மட்டுமல்ல, மார்க்சும் எங்கெல்சும் லெனினும் ட்ராஸ்க்கியும் ஸ்டாலினும், கோசிமின்னும் கேஸ்ட்ரோவும் சேகுவாராவும் பகத்சிங்கும் மீண்டும் பிறந்து வந்து தீவிரமாக போராடினாலும் பெரும்பான்மை மக்களிடம் புரட்சியின் மீது நம்பிக்கையை உண்டாக்க முடியாது.
இதற்கு மாறாக சிலர், தோழர் சேகுவாராவின் கருத்தை கூறுவார்கள். அதாவது "புரட்சி உருவாவது இல்லை உருவாக்கப் படுவது '' என்ற கருத்தை மேற்கோள் காட்டி,நாம் தான் புரட்சியை உருவாக்க வேண்டும் என்பார்கள்.
அதாவது, ஆளும் வர்க்கங்களின் அடிப்படை கட்டுமானங்களை, நிர்வாக அரசு எந்திரங்களை தீவிரவாத நடவடிக்கைகளாலும், கொரில்லா தாக்குதல்களாலும் உடைத்தெறிந்து புரட்சிகர நிலையை உருவாக்க வேண்டும், புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ஆளும் வர்க்கங்களின் கருவூலங்களை கொள்ளையடிக்க வேண்டும், அதன் மூலம் புரட்சிகர நடவடிக்கைகளுக்கும், புரட்சியாளர்களின் அன்றாடம் உயிர் வாழவதற்கு தேவையான செலவினங்களையும் செய்யலாம் புரட்சியை உருவாக்கலாம் என்பார்கள்.
இத்தகைய புரட்சிகர வன்முறைகளால் புரட்சிகர நிலமையை உருவாக்க முடியும் என்பார்கள். ஆனால் அவர்களால் இன்று ஒரு பெரு முதலாளியின் கருவூலத்தையோ அல்லது அவர்களின் பொது கருவூலமான வங்கிகளின் அருகில் செல்வதற்கு கூட அவர்களுக்கு சக்தியில்லை.
புரட்சி பற்றி பேசும் இன்னொரு பிரிவினரோ, மக்களிடம் உண்டியல் குலுக்கி, அதன் வருவாயில் இருந்து, அவர்கள் நம்பும் புரட்சியை பற்றி கருத்துக்களை பரப்பியும், அடித்தட்டு மக்களின் பெரும் பாதிப்புகளுக்கு எதிராக, மற்ற எவரையும் விட தீவிரமான அமைதி வழி போராட்டங்களில் ஈடு பட்டு வருகிறார்கள். இத்தகைய ஆயுதப் போராட்டங்கள், அதற்கு தயாரிப்பு எனக்கூறி சிலர் நடத்தும் புரட்சி பற்றிய பரப்புரைகள் எல்லாம், இன்றைய சமூகத்தில் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை இந்த வகை மார்க்சீயர்கள் உணராதது உண்மையிலேயே வேதனைக்குரியது.
ஆளும் வர்க்கங்களின் பொருளாதார அரசியல் நெருக்கடிகள் முற்றி அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, அதனால் மக்களுக்கு இனி வாழ முடியாது என்ற நிலை உருவாகும் போது, அதாவது சமூகத்தில் உண்மையாகவே புரட்சிகர நிலமை நிலவும் போது, தோழர் சேகுவாராவின் கருத்து சரியானது தான்.
பெரும்பாலான நாடுகளில் புரட்சியாளர்கள், தோழர் சேகுவாரா சொன்ன மாதிரியான கொரில்லா படைகளை ஆரம்பத்தில் உருவாக்கி, புரட்சிகர வன்முறைகளில், நடவடிக்கைகளில் ஈடுபட்டே பெரும்சக்தியாக மாறி வெற்றி தோல்விகளை பெற்றுள்ளனர்.
அதாவது பெரும்பான்மையான மக்களால் இனி வாழவே முடியாது என்ற நிலைவரும் போது, ஆளும் வர்க்கங்கள் தங்களுக்குள் தீவிரமாக சட்டையிட்டுக் கொண்டிருக்கும் புரட்சிகர நிலமை சமூகத்தில் நிலவும் போது, மார்க்சீயர்களாலும், புரட்சியாளர்களாலும் மக்களிடம் புரட்சியின் மீது நம்பிக்கையை உண்டாக்க முடியும் என்பதே மார்க்சீய லெனினியம்.
மேல் சொன்ன நிலை இன்று சமூகத்தில் கணிசமான பகுதிகளிலாவது நிலவுகிறதா?.
இதை கணிப்பதில் மார்க்சீயர்களிடம் உள்ள அறிவு, அனுபவக் குறைபாடுகளே மார்க்சீயர்களிடையே ஏற்பட்டுள்ள முக்கியமான இருவகை பிளவுக்கு முக்கிய காரணம்.
இனி வாழவே முடியாது என்ற நிலை இன்றைக்கு பெரும்பான்மை மக்களிடம் இல்லை என்பதே உண்மை. இதை மறுப்பவர்கள், சமூகத்தின் நிஜ நிலமைகளை, உள்ளதை உள்ள படியே உணரும் சக்தியற்றவர்கள் என்பதே உண்மை.
அடுத்து, பழைய முதலாளித்துவத்தாலும்/ ஏகாதிபத்தியத்தாலும், அவற்றின் அக முரண்பாடுகளால் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாது என்பதும், ஏகாதிபத்தியங்களால் ஏகாதிபத்திய யுத்தங்களை தவிர்க்க முடியாது என்பதும், அதனால் புரட்சியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கத்தின் தலமையிலான மார்க்சீயர்களின் திட்டமிட்ட, ஓழுங்கு மிக்க, விரைவான சோசலிசமும் தவிர்க முடியாதவை என்பதே மார்க்சீய லெனினியம்.
இதன்படியே இரண்டாம் உலகப்போர் வரை நடந்தது. இதை மார்க்சீயத்தின் எதிரிகள் கூட மறுக்க முடியாது.
ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆளும் வர்க்கங்களால், சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக, உலகின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரத்தை படிப்படியாக உயர்த்த முடிவது எப்படி?.
இதுதான் ஆழமாக ஆராய வேண்டிய விசயம். மார்க்சீயர்கள் ஆராய மறுக்கும் விசயம். ஆராயும் பலராலும் உண்மைகளை அறிய முடியவில்லை, உண்மைகளை அறிந்தோராலும், சரியான மாற்றுத் திட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இதுவரையியிலும் வெற்றிப் பெற முடியவில்லை என்பதே உண்மை.
இத்தகைய சூழ்நிலையில் தோழர்கள் காலன் துரைகள், அலக்ஸ் ஆண்டர்கள் போன்றோரும், ம.ஜ.இ.க, மக்கள் அதிகாரம், எம்எல், எம்எல்எம் போன்ற பாட்டாளி வர்க்க குழுக்களும், அமைப்புகளும் சிபிஐ, சிபிஎம் போன்ற இடது சாரி கட்சிகளும் என்னதான் பகீரத முயற்சிகள் செய்தாலும்,
இன்றைய நிலமையில் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த முடியாது.
இதே நிலமைதான் உலகின் பெரும் பகுதிகளிலும் உள்ளது. சில மிக மிக பின்தங்கிய நாடுகளிலும், நாடுகளின் சில பகுதிகளிலும் மட்டுமே புரட்சிகர நிலமைகள் உள்ளது. அங்கெல்லாம் தேசிய விடுதலைப் புரட்சியோ, மக்கள் விடுதலைப் புரட்சியோ நடை பெறுவதற்கு சாத்தியம் உள்ளது.
ஆனால் அனைத்து புதிய பேராதிக்கங்களும், பிற வளர்ச்சியடைந்த முதலாளித்துவ மற்றும் மன்னராட்சி நடக்கும் நாடுகளிலும் உள்ள எல்லா வகை ஆளும் வர்க்கங்களும், உலக அளவில் நட்பு முரண்பாடுகளோடு ஒன்றிணைந்து செயல் படுவதால், அதாவது புற சக்திகள் சாதகமாக இல்லாமல், பாதகமாக இருப்பதால் அக நிலமைகளால் புரட்சி சாத்தியமான நாடுகளிலும், நாடுகளின் சிறு தேசிய இனங்கள் மற்றும் பிற பகுதிகளிலும் புரட்சி வெல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதனையே இப்போதைய காலக்கட்டம் புரட்சிகர காலக்கட்டம் அல்ல, இது சீர்திருத்தக் காலக்கட்டம் என்கிறோம். புரட்சிகர காலக் கட்டத்தில் புரட்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதுபோலவே, சீர்திருத்தக் காலக்கட்டத்தில் எந்தக் கொம்பனாலும் புரட்சியை உருவாக்க முடியாது. எதிர்பாராத தற்செயல் நிகழ்ச்சிகள் ஏற்பட்டாலொழிய, இப்போதைக்கு இயல்பாக இந்த சீர்திருத்த சூழ்நிலை மாறாது.
என்னைப் பொறுத்தவரையில் மார்க்சீய லெனியத்தின் படி ஆழமாக ஆராயும் யாரும் மேற்கண்ட முடிவுக்கு வந்தேயாக வேண்டும். இது சம்பந்தமாக யாரோடும் எத்தகைய விவாதத்திற்கும் தயார்.
அடுத்து, மேற்கண்ட கருத்துக்கள் தான் இன்றைய உண்மை நிலமை, இதுதான் சரியென்று கருதுவோரிடம், இத்தகைய சூழ்நிலையில் முற்போக்காளர்கள், மார்க்சீயர்கள், புரட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும். இன்றைய புதிய வகை ஆளும் வர்க்கங்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்வி எழும்?.
முதலில் செய்ய வேண்டியது? இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்திய நாடுகளிலும் சோசலிச நாடுகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?. அவை எப்படி ஏற்பட்டன? மார்க்சீயர்கள் எதிர்பார்த்த மாதிரி ஏகாதிபத்திய முரண்பாடுகள் முற்றி இதுவரை ஏகாதிபத்திய யுத்தங்கள் நடைபெறாதது ஏன்? என்ற ஆய்வுதான் முதன்மையானது. முக்கியமானது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமரிக்கா அணுக்குண்டு கண்டுபிடித்தது என்பது, பலர் நினைப்பது போல ஒரு சாதாரண நிகழ்ச்சியல்ல. அணுக்குண்டு காகிதப் புலியல்ல. அது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட புரட்சி.
அணுக்குண்டு கண்டு பிடிப்பென்பது, அதுவரை நடந்து வந்த ஆயுதக்கருவிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட புரட்சி. அது அதுவரையான அரசியல் கருத்துக்களிலும், நடவடிக்கைகளிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
அதாவது, அதுவரை அதிக எண்ணிக்கையிலான மக்களின் புஜ பலமும், மரபு வழியிலான ஆயுதப் பலமுமே அரசியல் அதிகாரத்தை தீர்மானித்தது. அதனால் அதிக எண்ணிக்கையில் உள்ள மக்கள் சக்தியும், மக்கள் படையும், அவர்களின் ஆயுத பலமும் ஆள்வோரின் படைகளை எளிதில் வீழ்த்தி வென்று விடும்.
ஆனால் அணுக்குண்டு கண்டு பிடித்த பின் அதை எங்கிருந்தோ ஏவி, இலட்சக் கணக்கான மக்களை, அவர்களின் படைகளை ஒரே நாளில் அழித்து விடலாம் என்ற புதிய நிலை ஏற்பட்டது. அந்த நாசகர ஆயுதத்தை ஆளும் வர்க்கங்கள் தான் முதலில் கண்டு பிடித்தன. அதனால் உலக மக்களுக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும், சோசலிச நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.
பாட்டாளி வர்க்கங்களின் தலைமையிலான சோசலிச நாடுகள் முதலில் கண்டு பிடித்திருந்தால் இன்றைய உலகின் நிலமையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
நல்ல வாய்ப்பாக சோவியத் யூனியனும் விரைவில் அணுக்குண்டை கண்டு பிடித்து ஆயுத பலத்தை சமன் செய்து விட்டது. தோழர் ஸ்டாலின் தலமையிலான சோவியத் யூனியன் இந்த சாதனையை செய்திருக்கா விட்டால் சோசலிச நாடுகளின் பாட்டாளி வர்க்க அரசுகளும் சோசலிசமும் ஆளும் வர்க்கங்களால் அப்போதே துடைத்தெறியப் பட்டிருக்கும். இன்றைய உலக மக்களின் நிலை, இன்றைய நிலையை விட படு கேவலமாக இருந்திருக்கும். சோவியத் யூனியனும் தோழர் ஸ்டாலினும் தான், இன்றைய நிலையிலாவது இன்றைய உலக மக்கள் வாழ்வதற்கு மிக மிக முக்கிய காரணமாகும்.
அரசியல்/ இராணுவ பலத்தால் யாரும் யாரையும் வெல்ல முடியாது என்ற புதிய அரசியல் நிலமை ஏற்பட்டதால், சண்டையிட்டால் இருதரப்பும் பேரழிவை சந்திக்க வேண்டியது அல்லது அழிய வேண்டியது வரும் என்ற புதிய அரசியல் நிலமை எதிர்பாராமல் ஏற்பட்டதால், அதுவரையிலான அரசியல்/இராணுவ கோட்பாடுகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.
அதனால் அன்றைய பழைய ஏகாதிபத்தியங்கள், தங்களிடையே சண்டையிடாமல் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதோடு சோசலிச நாடுகளோடும் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோலவே அன்று அணுக்குண்டு வைத்திருந்த ஒரே சோசலிச நாடான சோவியத் யூனியனுக்கும் ஏகாதிபத்தியங்களோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சோசலிச சோவியத் யூனியனின், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் சக்தி வாய்ந்த தலைமகன்களில் ஒருவரான தோழர். ஸ்டாலின், அன்று ஏகாதிபத்தியங்களோடு, அறிவுப் பூர்வமாக சமாதானம் செய்து கொள்ளாமல் இருந்தால், சிலர்* கூறியவாறு உலகப் புரட்சியை தொடர்ந்திருந்தால், அன்று அணுக்குண்டு பலம் மட்டுமல்ல, அறிவியல் நுட்பத்தில் அதிக பலம் பெற்றிருந்த ஏகாதிபத்திய நாடுகளோடு அணுப்போர் ஏற்பட்டிருக்கும்.
அதனால் ஏகாதிபத்திய நாடுகளை விட பேரிழப்பு சோசலிச நாடுகளுக்கே ஏற்பட்டிருக்கும். இதனை புரிந்துக் கொண்டே, தோழர் ஸ்டாலின் அன்று தோழர் மாவோவின் ஆலோசனையை ஏற்று, ஏகாதிபத்தியங்களோடு அணுப்போர் நடத்த விரும்பாமல் சமாதானம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்தவர்தான் குருசேவ்.
அரசியல் நிலமைகளில் தலைகீழ் மாற்றம் அல்லது பெரும் மாற்றம் ஏற்பட்டால், அது பொருளாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே மார்க்சீயம். அதனடிப்படையில் தான், அன்றைய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார அடிப்படைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
பழைய முதலாளித்துவத்துவ/ ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் அடிப்படையே சுதந்திர பொருளாதாரமாகும். சுதந்திர பொருளாதாரம் என்பது, அரசின் எந்த கட்டுப்பாடும், அனுமதியும் இன்றி எந்த முதலாளியும் எந்த பொருளையும் உற்பத்தி செய்து, சந்தைப் படுத்தி, எவ்வளவு இலாபமும் சம்பாதிக்கலாம் என்பதுதான்.
முதலாளித்துவத்தின் முதல் கட்டத்தில், இந்த சுதந்திர பொருளாதாரத்தாலேயே முதலாளிகள் பெருமளவுக்கு வளர்ந்தார்கள், உற்பத்தி கருவிகளும், பாட்டாளி வர்க்கமும் பெருமளவுக்கு வளர்ந்தது. முதலாளிகள் பெருமளவுக்கு இலாபம் பெற்று சொத்துக்களை சேர்த்தார்கள், வளர்ந்தார்கள்.
யாரும் எந்த பொருளையும் எவ்வளவு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம், என்னவிலைக்கும் விற்கலாம், எவ்வளவு லாபமும் சம்பாதிக்கலாம் என்ற அவர்களது அன்றைய சுதந்திர பொருளாதார முறையே உலகில் மிகச் சிறந்த பொருளாதார உற்பத்தி முறை என்று, அவர்கள் அப்போது அவர்கள் பெருமையாக கூறிக்கொண்டார்கள்.
சுதந்திர பொருளாதாரத்தால், முதலாளிகள் போட்டிப் போட்டு பொருட்களை உற்பத்தி செய்ததால், சமூகத்தின் தேவையை விட உற்பத்தியான பொருட்கள் அதிகமாயின. அதனால் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை.
இதன் விழைவாக சந்தையை பிடிப்பதில் கடும் போட்டியும் சண்டைகளும் ஏற்பட்டன. சுழல் முறையில் தொழில் மந்தமும் ஆலைகள் மூடலும் போர்களும் ஏற்பட்டன. வென்றவர்கள் வாழ்ந்தார்கள். தோற்றவர்கள் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்தார்கள்.
சோசலிச நாடுகள் உருவான பின், அணுக்குண்டு கண்டு பிடிக்கப் பட்டபின், ஏகாதிபத்தியங்களுக்கு போர்களை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்,
அவர்களின் அக முரண்பாடுகளில் உள்ள, அழிவுக் கூறான சுதந்திரப் பொருளாதாரம் எனும் போட்டி பொருளாதாரத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பழையது போல் சுதந்திர போட்டியும் போர்களும் நடத்தினால், சோசலிச நாடுகள் தலமையில் பாட்டாளிகள் புரட்சி நடத்தி, தங்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை பழைய ஏகாதிபத்தியங்கள் நன்கு புரிந்துக் கொண்டன. தங்கள் அழிவு தவிர்க்க முடியாதது என்ற இக்கட்டான நிலையில் சிக்கி தவித்ததன.
அதனால் உடனடி அழிவிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு உயிர் வாழ வேண்டுமானால், தங்களது அழிவுக் கூறான சுதந்திர, போட்டி பொருளாதாரத்தை கைவிட்டு விட்டு, சோசலிசப் பொருளாதாரத்தின் ஆக்கக் கூறான, திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், டார்வினின் தகவமைப்பு தத்துவத்தின்படி, தங்களது அழிவுக் கூறான சுதந்திரப் பொருளாதாரத்தை கைவிட்டு விட்டு, சோசலிசத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கி, அதனை திட்டமிட்ட போட்டி, எல்லைக்குட்பட்ட போட்டி என்ற திட்டமிட்ட பொருளாதார உற்பத்தி முறைக்கு மாற்றி, தங்களை தகவமைத்துக் கொண்டு, உடனடி அழிவில் இருந்து தப்பித்தார்கள்.
இவ்வாறு, மார்க்சீயத்தை உள்வாங்கிய, திட்டமிட்ட போட்டியிலான பொருளாதார உற்பத்தி முறை, சோசலிச உற்பத்தி முறையை விட முற்போக்கானது. திட்டமிட்ட, எல்லைக்குட்ட போட்டி என்ற உற்பத்தி முறையால் சோசலிச நாடுகளை விட வேகமாக அறிவியல் தொழில் நுட்பத்தில் முன்னேறி பொருளாதாரத்தில் வென்றார்கள்.
மார்க்சீயத்தை உள்வாங்கிய ஏகாதிபத்தியங்களின் இந்த புதிய வகை உற்பத்தி முறையையும், அது சார்ந்த உற்பத்தி உறவுகளையும் அமைப்பு முறைகளையுமே புதிய ஏகாதிபத்தியம் (பேராதிக்கம்) என்கிறோம். இது பழைய ஏகாதிபத்தியங்களை விட முற்போக்கானது, அறிவியல் தொழில் நுட்பத்தில் முன்னேறியது. மார்க்சீயர்களின் சோசலிச திட்டமிட்ட உற்பத்தி முறையையும், மக்கள் நலத்திட்டங்களையும் உள்வாங்கியது.
பழைய ஏகாதிபத்தியங்களின் அழிவுக் கூறான சுதந்திர பொருளாதாரம் எனும் பகை முரண்பாட்டோடு கூடிய எல்லையற்ற போட்டிப் பொருளாதாரத்தையும், பகை முரண்பாடு கொண்ட ஏகாதிபத்திய போர்களையும் கைவிட்ட, தவிர்க்க முடிந்த புதிய வகை அமைப்பே புதிய பேராதிக்கம்.
பழைய பேராதிக்கங்கள் இவ்வாறு தங்களை மாற்றிக் கொண்டு, சோசலிஸ்ட்களை விட முன்னேறிய உற்பத்தி முறைக்கு மாறியதாலேயே சோசலிச நாடுகளை பொருளாதாரத்தில் வென்றது. அதனாலேயே சோவியத் யூனியனுக்கும், மார்க்சீயர்கள் திட்டமிட்ட ஒழுங்கு மிக்க சோசலிசத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய பேராதிக்கத்தை மார்க்சீயர்களின் பழைய வகை திட்டங்களாலோ, அதிக எண்ணிக்கையில் உள்ள மக்களின் புஜ பலத்தாலோ, ஆயுதப் பலத்தாலோ, போர்த் தந்திரங்களாலோ எளிதாக வீழ்த்த முடியாது. அதற்கு முக்கியமான காரணங்கள்.
1.புதிய பேராதிக்கங்களால் தொடர்ந்து உபரிமதிப்பை பெறவும் பெருக்கவும் முடிவதால், புரட்சிக்கு தலைமை தாங்க வேண்டிய வர்க்கமான, முன்னேறிய பாட்டாளி வர்க்கத்திற்கு உபரி மதிப்பிலும், அதிகாரத்திலும் பங்களித்து அவர்களை தங்களது ஆதரவு வர்க்கமாக்கி விட்டது. அதனால் மார்க்சீயம் கூறிய புரட்சியின் முன்னணிப் படையின் பெரும்பகுதி, புதிய பேராதிக்கங்களின் ஆதரவு வர்க்கமாக, அவர்களின் இளைய, சிறிய பங்காளிகளாக மாறி விட்டனர்.
2. ஆளும் வர்க்கங்களால் உபரி மதிப்பை தொடர்ந்து பெருக்க முடிவதால், பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரத்தை படிப்படியாக முன்னேற்ற முடிகிறது. கூட்டுச்சேரும், பேரம் பேசும் சக்தி பெற்ற வர்க்கப் பிரிவுகளை விரைவாகவும், அந்த சக்திகள் இல்லாதவர்களை மெதுவாகவும் முன்னேற்றி வருகிறது.
3.பாட்டாளி வர்க்கங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது, சேவைத் தொழிலாளர்களையும், சிறு தொழில், சேவைகளில் ஈடுபடுவோரையும், சிறு உடமையாளர்களையும் திட்டமிட்டு பெருக்கி வருகிறது.
4. மக்களில் அறிவுத் திறமைகள் அதிகமுள்ளோர்கள், முதலாளிகளாக மாறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து சிலர் முதலாளிகளாவதற்கு வாய்ப்பளிக்கிறது.
மேற்கண்ட எல்லாவற்றையும் புரிந்துக் கொள்ளாமல், புதிய பேராதிக்கங்களை பழைய பாதைகளில் சென்று போராடி வீழ்த்தலாம் என்று நம்புவதும் போராடுவதும், புதிய நிலமைகளுக்கான மார்க்சீயம் அல்ல. அவ்வாறு நம்புவது பழைய நிலமைகளுக்கான, புரட்சிகர காலக் கட்டத்திற்கான மார்க்சீய கருத்துக்கள். அவை புதிய நிலமைகளுக்கான புதிய மார்க்சீய கருத்துக்கள் அல்ல.
புதிய பேராதிக்கங்களை தொழிலாளர்களும், மக்களும் சேர்ந்து வீழ்த்துவதற்கு புதிய பேராதிக்கமே புதிய பாதையை திறந்து விட்டுள்ளது.
அதாவது இன்று புதிய பேராதிக்கங்கள் முன்னேறிய தொழிலாளர்களுக்கும், மக்களில் முன்னேறிய பிரிவினருக்கும், உபரி மதிப்பில் ஒருபகுதியை தவிர்க்க முடியாமல் பகிர்ந்தளித்து வருகிறது. அந்த உபரிமதிப்பை மூலதனமாக்கி தொழிலாளர்களில் இருந்தும், மக்கள் பிரிவுகளில் இருந்தும் சிலர் சிறு முதலாளிகளாகவும் விவசாயிகளாகவும் மாறுகின்றனர்.
பெரும்பகுதியினர் தங்களிடம் வரும் உபரி மதிப்பை அரசு முதலாளித்துவ நிறுவனங்களிலும், தனியார் முதலாளித்துவ நிறுவனங்களிலும் சேமிப்பாகவும், மூலதனமாகவும் செலுத்தி முதலாளிகளின் மறைமுகமாகவும், நேரடியாகவும் சிறு பங்காளிகளாக மாறி வருகிறார்கள். இவர்களின் இந்த மூலதன பங்களிப்பை வைத்தே இன்று பெரும்பாலான முதலாளித்துவ கார்பரேட்டுகள் இயங்குகின்றன.
தொழிலாளர்களும், மக்களும் முதலாளிகளுக்கு, வேறு வழியில்லாமல், தானாக அளிக்கும் மக்களின் மூலதனத்தை மடைமாற்றம் செய்து, மக்களின் அமைப்புகள் மக்களின் கார்பரேட்டுகளை உருவாக்கி சிறப்பாக நிர்வகித்தாலே, புதிய பேராதிக்கங்களின் கார்பரேட்டுகளின் முதுகெலும்பு தேய ஆரம்பிக்கும். புதிய பேராதிக்கங்களின் ஆணி வேர்களிலேயே அரிப்பை ஏற்படுத்தும்.
புதிய பேராதிக்கத்தால் தவிர்க்க முடியால்உருவாகியுள்ள இந்த புதிய வாய்ப்பை அமைதி வழியில் மக்களுக்கான உற்பத்தி சாதனங்களை மக்களே மக்களின் கார்பரேட்டுகளின் மூலம் உருவாக்கி நிர்வகித்தல் என்கிறோம். இவற்றை உருவாக்கவும், நிர்வகிக்கவும் முதலாளிகள் தேவையில்லை என்கிறோம். மக்களின் கார்பரேட்டுகள் வளர வளர, பலம் பெருக, அதன் ஆதிக்கம் அரசியலிலும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்றும் என்கிறோம்.
மக்களின் கார்பரேட்டுகள் என்ற புதிய பாதையோடு பழைய பாதைகளையும் இணைக்க வேண்டும், இணைக்க முடியும். ஏனெனில் இவை எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவைதான்.
அதாவது ஆளும் வர்க்கங்களின் உற்பத்தி சாதனங்களை ஆயுதப் போராட்டத்தின் மூலம் கைப்பற்றுவதுதான், புரட்சியாளர்களின் ஆயுதப் போராட்ட புரட்சிகர பாதை. ஆளும் வர்க்கங்களின் தேர்தல் முறை மூலம் மக்களின் வாக்குகளை பெற்று, ஆட்சியை பிடித்து, ஆளும் வர்க்கங்களின் அரசியல் சட்டத்தை அப்படியே பயன்படுத்தியோ அல்லது திருத்தியோ ஆளும் வர்க்கங்களின் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவது தான் தேர்தல் பாதை, சீர்திருத்தப் பாதை.
இப்போதைக்கு மேற்கண்ட இரண்டு பாதைகளிலும் ஆளும் வர்க்கங்களின் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவத சாத்தியமற்றது அல்லது மிகவும் சிரமமானது. அதுவும் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாக வாக்குச் சீட்டை தூக்கி வாக்குப் பெட்டியில் போடுவதற்கு கூட மக்களை தயார் படுத்த முடியாத போது அவர்களை ஆயதம் தூக்க வைத்து ஆட்சியை கைப்பற்றுவது என்பது சற்றும் சாத்தியமற்றது.
ஆனால் மக்களிடம் வரும், சேமிக்கும் உபரிமதிப்பையும், மக்களது உழைப்பையும், அறிவையும் திறமையையும், ஒட்டு மொத்த சக்தியையும் அடிப்படையாகக் கொண்டு, அமைதி வழியில் தங்களுக்கான உற்பத்தி சாதனங்களை தாங்களே மக்களின் கார்பரேட்டுகள் மூலம் உருவாக்கலாம் என்பதே இந்த புதிய பாதை.
முதலில் உற்பத்தி சாதனங்களை உருவாக்குவோம். மக்களின் உற்பத்தி சாதனங்களின் பலம் பெருக பெருக தேர்தல் பாதையிலும், ஆயுதப் பாதையிலும் ஆளும் வர்க்கங்களின் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றலாம் என்பதே இந்த புதிய பாதையின் அடிப்படை. அதாவது மார்க்சீயர்களின் முந்தைய இருபாதைகளையும் உள்வாங்கியதே இந்த புதிய பாதை.
இந்தப்பாதையின் முதல் படியே மக்களின் கார்பரேட்டுகள். முதல் படியையே கட்டாமல், தாண்டாமல் மூன்றாம் படியான தேர்தல் மூலம் அதிகாரத்தையும் உற்பத்தி சாதனங்களையும் கைப்பற்றவும், முப்பதாவது படியான ஆயுதப்பாதையின் மூலம் தாண்டி, தாவிப் பாய்ந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதும் இன்றைய காலக் கட்டத்தில் சாத்தியமற்றவை.
முதல் படியான மக்களின் கார்பரேட்டுகளை கட்டி எழுப்ப திட்டமிடவும், அவை சிறப்பாக செயல்பட வழி காட்டவும், கண்காணிக்கவும், சமூக அறிவியலிலும், அறிவியல் தொழில் நுட்பத்திலும் ஒப்பீட்டளவில் அதிக அறிவு பெற்றவர்கள் கொண்ட ஒரு அமைப்பு வேண்டும். அதன் உட்கருக்கள் உருவாகியாயிற்று, ஒன்றிணைந்தாயிற்று, அவை இன்னும் விரிவடைய வேண்டும், பலம் பெற வேண்டும். இதற்காக சிந்திப்பதும், உழைப்தும், விவாதிப்பதும், போராடுவதுமே இன்றைய உன்னத புரட்சிகர கடமையும், பணியுமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக