ஞாயிறு, 1 ஜூலை, 2018

(10) லுத்விக் பயர்பாக் சொன்ன சில விஷயங்களை
மார்க்ஸ் நிராகரித்தார்!
ஞானியும் நாகராஜனும் ஏற்றுக் கொண்டனர்!
திருவள்ளுவரும் லுத்விக் பயர்பாக்கும்!
ஞானிக்கு மறுப்பு கட்டுரைத் தொடர்: எண்-10 
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
லுத்விக் பாயர்பாக் (Ludwig Feuerbach  1804-1872)
பெர்லின் பல்கலையில் தத்துவம் பயின்றவர்.
தத்துவஞானி ஹெகலின் மாணவர். காரல் மார்க்சின்
ஆசான். பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தையே
செழுமைப்படுத்தி மார்க்சியத்தின் பொருள்முதல்
வாதமாக ஆக்கிக் கொண்டார் மார்க்ஸ்.

பாயர்பாக் அழுத்தமான நாத்திகர். பொருள்முதல்வாதி.
இவர் 1841ல் கிறித்துவத்தின் சாரம் (The Essence of Christianity)
என்று ஒரு நூலை ஜெர்மன் மொழியில் எழுதினார்.
இவர் எழுதிய நூல்களில் இது தலைசிறந்த
நூலாகக் கருதப் படுகிறது.

மார்க்சும் எங்கல்சும் இந்த நூல் வந்தபோது இளைஞர்கள்.
அப்போது மார்க்சுக்கு வயது 23; எங்கல்சுக்கு 21.
இந்நூல் அவர்களை மிகவும் கவர்ந்தது. இதைப்
படித்தவுடனேயே "நாங்கள் பாயர்பாக்வாதிகள்
ஆகி விட்டோம்" என்றார் எங்கல்ஸ்.

"இந்த நூல் தரும் விடுதலை உணர்வை ஒருவர்
சுயமாக அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்"
என்று புகழாரம் சூட்டினார் எங்கல்ஸ்.

அழுத்தமான நாத்திகராகவும் பொருள்முதல்வாதத்தை
மார்க்சுக்கு கொடையளித்தவராக இருந்தபோதிலும்,
கடவுளுக்குப் பதிலாக அன்பை மையமாகக் கொண்ட
ஒரு தத்துவத்தை, ஒரு மதத்தை உருவாக்கலாம்
என்ற கருத்தும்கூட பாயர்பாக்கிற்கு இருந்தது.
எடுத்த எடுப்பிலேயே மார்க்சம் எங்கல்சும் இந்தக்
கருத்தை நிராகரித்தனர்.

ஜெர்மானிய வாசகர்கள் மற்றும் ஐரோப்பிய
வாசகர்கள் மத்தியில் பாயர்பாக்கிற்கு நல்ல
செல்வாக்கு உண்டு. ஐரோப்பியச் சிந்தனையில்
தொடர்ந்து பல தலைமுறைகளாக பாயர்பாக்கின்
தாக்கம் இருந்து வந்தது.

தமிழ் வாசகர்களிடம் பாயர்பாக் பற்றிய அறிமுகமும்
புரிதலும் மிகக் குறைவே. இது வாசகர்களின்
குறையல்ல. திருவள்ளுவரைப் பற்றி ஐரோப்பிய
வாசகர்கள் அறியாமல் இருப்பது போன்றதே இது.

1841ல் பாயர்பாக் எழுதிய கிறித்துவத்தின் சாரம்
என்ற இந்த நூல் இன்றளவும் படிக்கப்பட்டு
வருகிறது. (ரூ 529 விலையில் பிளிப்கார்ட் (Flipkart)
நிறுவனத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
கிடைக்கிறது). 

மார்க்ஸ் எங்கல்சின் ஆசானும், மார்க்சியத்துக்கு
பொருள்முதல்வாதத்தைக் கொடையளித்தவரும்
ஆகிய பாயர்பாக்கின் "கிறித்துவத்தின் சாரம்"
என்ற நூலைப் படிக்காமல் மார்க்சியம் குறித்த 
புரிதலில் தெளிவு பெற இயலாது. அணில் ஆணி
இலை ஈக்கள் என்பதை ஒருபோதும் தாண்டாத
அரிச்சுவடி மார்க்சியர்கள் மேற்சொன்ன
கருத்தை ஆட்சேபிக்கலாம். அதற்கு அவர்களுக்கு
உரிமை உண்டு.

எஸ் என் நாகராஜன், ஞானி போன்றோரின்
கடவுள் மதம் பற்றிய கருத்துக்களின் வேர்கள்
பாயர்பாக்கிடம் இருக்கின்றன என்பதை
மறுக்க இயலாது. இதன் பொருள் நாகராஜனை
எதிர்ப்பது என்பதில் பாயர்பாக்கை எதிர்ப்பது
என்பதும் உள்ளடக்கம்.
********************************************************    

   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக