வெள்ளி, 29 ஏப்ரல், 2016

சமூகநீதிக் காவலரும் பொது நுழைவுத் தேர்வின்
தந்தையுமான குலாம் நபி ஆசாத் வாழ்க!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களுக்கு
ஒரே பொதுத் தேர்வு நடத்துவது என்ற முடிவு காங்கிரஸ்
ஆட்சிக் காலத்தில் (UPA-II, 2009-2014) எடுக்கப் பட்டது.
இதுதான் நீட் தேர்வு என்று அழைக்கப் படுகிறது.
டாக்டர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்
எடுத்த முடிவு இது.

2009 மே முதல் 2014 மே வரை மத்திய சுகாதாரத்துறை
அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவர்
காஷ்மீர் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்துக்கு முன்பு 2009 மே வரை சுகாதார
அமைச்சராக இருந்தவர் டாக்டர் அன்புமணி. இவரின்
காலத்தில் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்
புற்றீசல் போல் வளர்ந்தன.MBBS இடங்கள் விற்பனைப்
பண்டங்கள் ஆயின.

பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, வணிக மயமாகிப்
போன மருத்துவக் கல்வியை மீட்டெடுத்து, மருத்துவக்
கல்வியின் தரத்தைப் பேண  உறுதி பூண்டார் குலாம்
நபி ஆசாத். அதற்காக NEET எனப்படும் பொது நுழைவுத்
தேர்வை முன்மொழிந்தார்  குலாம் நபி ஆசாத்.
இது குறித்து டாக்டர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலைப்பெற்றிருந்தார் என்பது
குறிப்பிடத் தக்கது.

இதற்கான அறிவிக்கை டிசம்பர் 21, 2010இல் மருத்துவக்
கவுன்சிலால் (MCI) வெளியிடப்பட்டது. இதுதான் மூல
ஆவணம். நன்கு கவனிக்கவும்: இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட   ஆண்டு 2010, காங்கிரஸ்
ஆட்சியின்போது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,
தற்போது, 2016 ஏப்ரலில் இந்த மூல ஆவணம்
செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டிலேயே அறிவிக்கை வெளியிட்ட
போதிலும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும்
(all stake holders)  போதிய அவகாசம் கொடுத்து
2012 கல்வியாண்டு முதல் NEET தேர்வை  நடத்துவது
என்று முடிவு செய்யப் பட்டது.

இருப்பினும் தேர்வு நடத்தும் பொறுப்பில் உள்ள
CBSE மேலும் ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து,
2013 கல்வியாண்டில் இருந்து  மட்டுமே NEET தேர்வை
நடத்தியது. இதன்படி, முதல் NEET தேர்வு 2013 மே
மாதம் முதல் ஞாயிறு அன்று (5 மே 2013) நடந்தது.

அவ்வளவுதான்! நாட்டில் பிரளயமே ஏற்பட்டு
விட்டது. சுயநிதிக் கல்லூரி முதலைகள் வெறியாட்டம்
ஆடின. இந்தத் தேர்வை எதிர்த்து ஏற்கனவே
நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இவற்றுள் ஆகப்
பெரும்பான்மை மனுக்கள் சுயநிதி முதலைகள்
தாக்கல் செய்தவை ஆகும்.

ஒரு MBBS சீட்டுக்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய்
வாங்கி ருசி கண்ட சுயநிதி முதலைகள், குலாம் நபி
ஆசாத்தும் மன்மோகன் சிங்கும் சேர்ந்து தாங்கள்
அடிக்கும் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி
வைப்பதை அனுமதிப்பார்களா?

ஆக, சுயநிதி முதலைகளுக்குச் சாதகமாகவே
உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு
வழங்கியவர் அன்றைய தலைமை நீதிபதி
அல்டாமஸ் கபீர். அதாவது இவர்  தலைமையிலான
மூவர் கொண்ட அமர்வு. தீர்ப்பு வழங்கப்பட்ட தேதி
ஜூலை 18, 2013.

மே 5இல் முதன் முதலாக NEET தேர்வு.
ஜூலை 18இல் NEET செல்லாது என்று  தீர்ப்பு.
73 நாட்களுக்குள் NEET தேர்வின் வாழ்வு முடிவுக்கு
வந்தது.

தீர்ப்பு வந்த தேதியான ஜூலை 18 இந்திய நீதித்
துறையில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டாமஸ்
கபீர் பணிநிறைவு (retirement) பெறுகிறார். ஒருநாள்
தள்ளிப் போனால், அவரால் இந்தத் தீர்ப்பை--
சுயநிதி முதலைகளுக்குச் சாதகமான தீர்ப்பை
வழங்கி இருக்க முடியாது.

தீர்ப்பு வழங்குகிற அவசரத்தில், தமது அமர்வில்
உள்ள மூன்றாவது நீதிபதியான அனில் தவே
அவர்களைக்கூடக் கலந்து ஆலோசிக்காமல்
நீதியரசர் அல்டாமஸ் கபீர் தீர்ப்பை வழங்கினார்.

அவசர கோலத்தில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு
சுயநிதி முதலைகள் தங்கு தடையின்றி தங்கள்
கொள்ளையைத் தொடர்வதற்கு வழி செய்தது.

இந்தத் தவறான தீர்ப்பை இதே உச்சநீதி மன்றம்
அண்மையில் இதே மாதம் ஏப்ரல் 11, 2016 அன்று
திருத்தி எழுதியது. ஆக ஜூலை 18, 2013இல்
வெளியான தவறான தீர்ப்பைத் திருத்த
மூன்று ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொண்டது
உச்சநீதிமன்றம்.

சுயநிதிக் கொள்ளையர்களின் மண்டையில் ஓங்கி
அடிக்கும் இந்த பொது நுழைவுத் தேர்வு குலாம் நபி
ஆசாத் அவர்களின் மூளையில் உதித்த திட்டம்
ஆகும்.  ஆசாத்-மன்மோகன்-சோனியா ஆகிய
இம்மூவரும் இந்துத்துவவாதிகள் அல்ல. இவர்கள்
சமூகநீதிக்கு எதிரானவர்களும் அல்ல. குலாம் நபி
ஆசாத் சமூகநீதிக்கு எதிராகவே பொது நுழைவுத்
தேர்வைக் கொண்டு வந்தார் என்று புத்தி
பேதலித்தவன் கூடச் சொல்ல மாட்டான்.

மேலும், இக்காலக் கட்டத்தில் காங்கிரசின்
அமைச்சரவையில் திமுக இடம் பெற்று இருந்தது.
மு.க.அழகிரி உட்படப் பலர் மன்மோகன்
அமைச்சரவையில் பங்கேற்று இருந்தார்கள்.

எனவே, பொது நுழைவுத் தேர்வு என்பது சமூகநீதிக்கு
எதிரானது என்பது சிந்தனைக் குள்ளர்களின் வாதமே
தவிர, உண்மை அல்ல.

உண்மையில், சுயநிதி முதலைகளிடம் இருந்து
ஏழை மாணவர்களைக் காக்க வல்லது பொது
நுழைவுத் தேர்வே.
***************************************************************







     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக